தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் இதே போன்று வகைப்படுத்தி கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது

Jun 29, 2026 - 14:35
0 197
தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..!

தமிழக காவல்துறையில் குற்றங்களை வகைப்படுத்தி குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரவுடிகளை பல்வேறு கேட்டகிரிகளாக பிரித்து அவர்களை கண்காணித்து குற்றங்களை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் இதே போன்று வகைப்படுத்தி கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது ஸ்பெக்ட்ரம் என இந்த புதிய திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.

பாலியல் குற்றவாளிகளின் விபரக்குறிப்பு தயாரிப்பு, மதிப்பீடு, வகைப்படுத்துதல், கண்காணிப்பு, ஆபத்து பகுப்பாய்வு மற்றும் ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு" ஆகும். முதற்கட்டமாக காவல்துறை  தென்மண்டலத்தில் 10 மாவட்டங்களில் 15000 பாலியல் தொடர்பான குற்றவாளிகளை வகைப்படுத்தி கண்காணிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட உள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக பாலியல் குற்றங்களை குறைப்பதற்கும், அதுபோன்ற குற்றங்களை செய்தவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர். சமூகத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் குற்றத்தன்மை, அதன் தீவிரம் மற்றும் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் வகையில், ஒரு புதிய "வண்ணக் குறியீட்டு பாலியல் குற்றவாளிகள் கண்காணிப்பு முறை" (Colour-Coded Sexual Offender Tracking and Monitoring System) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், குற்றவாளிகளின் பின்னணி மற்றும் அச்சுறுத்தலின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டு, உளவுத்துறை சார்ந்த ஒரு தரப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முறையாகும்.  இதன் மூலம் பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுப்பதுடன், காவல் துறையின் வளங்களைச் சரியான முறையில் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் கீழ் குற்றவாளிகள் மொத்தம் 8 பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிவப்பு குறியீடு :

தீவிரப் பாலியல் குற்றவாளிகள் தொடர் பாலியல் வன்புணர்ச்சியாளர்கள் , கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சியாளர்கள் , கொடூரமான பாலியல் வேட்டையாடுபவர்கள்  மற்றும் மீண்டும் மீண்டும் போக்ஸோ (POCSO) சட்டத்தில் கைதாகும் குற்றவாளிகள் அடங்குவர்.
இவர்கள் சமூகத்திற்கு உச்சக்கட்ட அச்சுறுத்தலாகக் கருதப்படுவதால், இவர்களின் மீது மிகத் தீவிரமான கண்காணிப்பு செலுத்தப்படும்.

ஆரஞ்சு குறியீடு:

தொடர் குற்றவாளிகள் மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், தொடர் சீண்டல் மற்றும் பின்தொடர்ந்து தொல்லை தருபவர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களின் நடமாட்டம் மற்றும் இணையச் செயல்பாடுகள்  தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நீலக் குறியீடு: இணையவழி பாலியல் குற்றவாளிகள்

ஆன்லைன் மூலம் சிறுவர், சிறுமியரைக் குறிவைப்பவர்கள்  இணையவழிப் பாலியல் மிரட்டல் விடுபவர்கள் , சைபர் ஸ்டாக்கர்கள் மற்றும் குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகப் பொருட்கள்  நுகர்வோர் அல்லது தயாரிப்பாளர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கருப்புக் குறியீடு: திட்டமிட்ட பாலியல் குற்ற கும்பல்.

மனிதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், வணிகரீதியான பாலியல் தொழிலில் ஈடுபடும் நெட்வொர்க் நடத்துபவர்கள் மற்றும் போதைப்பொருள் போன்ற பிற குற்றங்களுடன் தொடர்புடைய சர்வதேச மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பாலியல் குற்றவாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வெள்ளி நிறக் குறியீடு:

சிறார் குற்றவாளிகள் 18 வயதிற்கு உட்பட்ட சிறார் பாலியல் குற்றவாளிகள்  மற்றும் பாலியல் தொல்லைகளில் ஈடுபடும் சிறுவர்களும் அடங்குவர். 

ஊதா நிறக் குறியீடு:

ஓரினச்சேர்க்கை தொடர்பான குற்றங்கள். குறிப்பாக ஓரினச்சேர்க்கை சார்ந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மற்றும் பிரத்யேக செயலிகள் மூலமாக இணையவழியில் குற்றங்களைச் செய்வோர் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இளஞ்சிவப்பு குறியீடு:

ஈவ்-டீசிங் மற்றும் தொடுதல் இல்லாத குற்றங்கள்..பெண்களைக் கேலி செய்பவர்கள்  ரகசியமாகப் படம் பிடிப்பவர்கள் , பொது இடங்களில் ஆபாசமாக நடப்பவர்கள் மற்றும் தொடுதல் இல்லாத பாலியல் அச்சுறுத்தல்களில் பார்வையாலேயே அசிங்கப்படுத்துவது, சைகை காட்டுவது  ஈடுபடுவோர்.

பச்சை குறியீடு:

மிதமான அச்சுறுத்தல் கொண்டவர்கள். முதல் முறை அல்லது எதிர்பாராதவிதமாகத் தனிப்பட்ட முறையில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்கள், குடும்பத்திற்குள் நடக்கும் பாலியல் வன்கொடுமைகள்  மற்றும் பரஸ்பர சம்மதத்துடன் ஓடிப்போனாலும் சட்டப்படி வயது பூர்த்தியாகாத  வழக்குகள் உள்ளவர்கள் ஆவர்.

அதிக ஆபத்துள்ள குற்றவாளிகள் மீது பிரத்யேக கவனம் செலுத்த முடியும்.குறிப்பிட்ட குற்றவாளிகள் மீது மட்டும் காவல்துறையின் கண்காணித்து நடவடிக்கை எடுக்க இந்த திட்டம் உதவுவதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User