கஞ்சா விற்பனை படுஜோர்..மடக்கிப் பிடித்தது மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ்..4 பேருக்கு லாக்கப்..

Apr 07, 2024 - 02:35
0 293
கஞ்சா விற்பனை படுஜோர்..மடக்கிப் பிடித்தது மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ்..4 பேருக்கு லாக்கப்..

மயிலாடுதுறையில் கஞ்சா விற்றதாக 4 பேரை கைது செய்த மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், அவர்களிடம் இருந்து 8 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்துள்ளனர். 

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் பின்னணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் செயல்பட்ட சம்பவம் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்திருப்பதற்கு சாட்சியாக கூறப்பட்டது. இதனிடையே போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்த நிலையில், மயிலாடுதுறையில் கஞ்சா விற்பனை செய்வதாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் மீனாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலைய பகுதியில் அதிரடியாக சோதனை சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சத்தியசீலன், சீனிவாசன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

தொடர்ந்து இருவரிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில்,  பங்காரு கிருஷ்ணன், வீரபாண்டியன் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட 8 கிலோ கஞ்சாவின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை போலீசார் கைப்பற்றிய கஞ்சாவில் இதுவே அதிகளவு என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User