"நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது"- மத்திய அரசை கடிந்த முதலைச்சர் மு.க.ஸ்டாலின் !

மிக்ஜாம் புயல் நிவாரணமாக தமிழகத்திற்கு 276 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பாக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக அரசை விமர்சித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Apr 27, 2024 - 21:16
0 459
"நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது"- மத்திய அரசை கடிந்த முதலைச்சர் மு.க.ஸ்டாலின் !

கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் தமிழகத்தையே தண்ணீரில் மிதக்க வைத்த, மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு அரசு ரூ.37,907 கோடியை கோரியது. 

அதேவேளையில், "பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை ரூ.2,477 கோடி  செலவு செய்துள்ளது" என முதலமைச்சர் எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

ஆனால், "பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் ரூ.276 கோடி, அதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது" என மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

மேலும், "தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்" எனவும் கடுமையாக சாடி பதிவிட்டிருக்கிறார். 

முன்னதாக, கடந்தாண்டு டிசம்பரில் மிக்ஜாம் புயல் பாதிப்பின் போது தமிழகத்திற்கு ரூ.115.49 கோடியும், தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் என மொத்தமாக ரூ.276கோடியை நிவாரணமாக அறிவித்த மத்திய அரசு அதனை இன்று விடுவித்தது.

இதேவேளையில், கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரி வந்த கர்நாடக அரசுக்கு ரூ.3454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் எதிரொலியாக மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் போர் கொடி உயர்த்தியுள்ளனர். 

ஆனால், மழைக்கு முன்னதாக மத்திய அரசு சார்பாக ரூ.4,000 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதனை மாநில அரசு என்ன செய்தது என மத்திய அரசு மற்றும் பாஜக தலைவர்கள் சார்பாகவும் குற்றம்சாட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User