23 நாய்களுக்கு தடை விதித்த உத்தரவு வாபஸ்.. திரும்ப பெற்றது ஏன்? அரசு விளக்கம்.. பெற்றோர் பீதி
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறை அறிவித்துள்ளது பெற்றோர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த 6ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பூங்காவின் காவலாளியின் 5 வயது மகளை ராட்வைலர் இன வகையை சேர்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு தாக்கி கடித்து குதறியது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
அதேபோல், சூளைமேடு சர்புதீன் தெருவை சேர்ந்த சுரேஷ், நீலா என்ற தம்பதி நடைபயிற்சி மேற்கொண்டபோது, அதே பகுதியை சேர்ந்தவரின் வளர்ப்பு நாய் ஒன்று இருவரையும் கடித்தது. இதேபோன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வளர்ப்பு நாள் மற்றும் தெருநாய்களால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார் எழுந்தது.
இந்த சம்பவங்களின் எதிரொலியாக 23 வகையான நாய்களை வளர்க்க தமிழ்நாடு அரசு நேற்று (மே 9) தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த மார்ச் 12 ஆம் தேதி மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு துறையின் வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த பங்கேற்பாளர்களுடன் ஏற்படுத்தப்பட்ட குழுவின் பரிந்துரையில் சுமார் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், 23 வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண், பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ளவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், நாய் வளர்ப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு விதித்துள்ளது. விதித்தது. அதன்படி, “நாய் வளர்ப்பவர்கள் நாயை பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது கட்டாயமாக சங்கிலி மற்றும் முகக்கவசம் அணிந்து அழைத்து செல்லவேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவானது நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்ப இருக்க வேண்டும்.
தரமான கழுத்துப்பட்டை மற்றும் தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும்" என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், 23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை திரும்ப பெற்றுள்ளது.
நாய் இனங்களை வளர்க்க தடை விதித்திருந்த மத்திய அரசின் அறிவிப்பாணைக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், நேற்று பிறப்பித்த உத்தரவு திரும்ப பெறப்படுவதாக கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்துள்ளது. அதேநேரம், நாய் வளர்ப்பவர்களுக்கு விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளது.
What's Your Reaction?
Like
5
Dislike
2
Love
6
Funny
9
Wow
0
Sad
4
Angry
48




Comments (0)