மக்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் 24.37% வாக்குப்பதிவு.. எங்கு அதிகம்? எங்கு குறைவு?

நாட்டின் 18வது லோக்சபா தேர்தலில் முதல் கட்ட வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வெயில் சுட்டெரித்தாலும் மக்கள் வரிசையில் நின்று விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணி வரைக்கும் 24.37% சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.

Apr 19, 2024 - 12:26
0 248
மக்களவைத் தேர்தல்.. தமிழ்நாட்டில் 24.37%  வாக்குப்பதிவு.. எங்கு அதிகம்? எங்கு குறைவு?

18வது மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 102 வயது பாட்டி முதல் 18 வயதாகும் முதல் தலைமுறை வாக்காளர்கள் வரைக்கும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் காலை 9 மணி வரை 12.55% வாக்குகள் பதிவானது. சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி தொகுதிகளில் 15% வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார்.  

அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 15.10% குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 8.59% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். போரூர், தருமபுரி உள்ளிட்ட நான்கு முதல் ஐந்து இடங்களில் சில வாக்கு பதிவு இயந்திரத்தில் பிரச்சனைகள் இருந்ததாகவும், அதுவும் மின்சாரம், கேபிள் உள்ளிட்ட  பிரச்சனைகள் உடனடியாக சரி செய்யப்பட்டது. தற்போதுவரை எங்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லை என தெரிவித்தார்.

காலை 11 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 24.37%  வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் நாமக்கல், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கரூர் ஆகிய லோக்சபா தொகுதிகளில் அதிகபட்சமாக 26% பேர் வாக்களித்துள்ளனர். குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 20.09% பேர் வாக்களித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User