சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசுக்கு ஸ்டாலின், எடப்பாடி வலியுறுத்தல் 

சிலிண்டர் தட்டுப்பாட்டால் வீடு, ஹோட்டல் மட்டுமில்ல எல்பிஜி கார், ஆட்டோக்களும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி வலியுறுத்தி உள்ளனர். 

Mar 10, 2026 - 10:06
0 502
சிலிண்டர் தட்டுப்பாடு மத்திய அரசுக்கு ஸ்டாலின், எடப்பாடி வலியுறுத்தல் 
மத்திய அரசுக்கு ஸ்டாலின், எடப்பாடி வலியுறுத்தல் 

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். 'எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும். தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்'.

"அமெரிக்கா - ஈரான் போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், இதுகுறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று விரிவாக ஆய்வு செய்தேன். தற்போது பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு வளைகுடா நாடுகளில் வாழும் தமிழர்களின் பாதுகாப்பையும் அப்பகுதியில் சிக்கியுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் நலனையும் உறுதி செய்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திட வேண்டும்.

இந்தப் போரால் ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும், தமிழ்நாட்டின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, வணிக எரிவாயு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான அனைத்து மாற்று ஏற்பாடுகளும் செய்யப்பட வேண்டும் என்றும், தேவைப்படும் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று வழங்கிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளேன்" இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். 

சிலிண்டர் கிடைக்க ஆவண செய்க: எடப்பாடி பழனிசாமி 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசை வலியுறுத்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈரான்- இஸ்ரேல், வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து, தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து, தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்க வைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User