இறைச்சி கடைகளில் ஆடு,மாடு வெட்டுவதற்கு தடைக்கோரிய மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி

இறைச்சி கடைகளில் ஆடு, மாடுகள் வெட்டுவதற்கு தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Mar 02, 2026 - 09:38
0 226
இறைச்சி கடைகளில் ஆடு,மாடு வெட்டுவதற்கு தடைக்கோரிய மனு  உயர்நீதி மன்றம் தள்ளுபடி
ஆடு,மாடு வெட்டுவதற்கு தடைக்கோரிய மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி

மிருக வதை சட்டத்தில், ஆடு, மாடு, கோழிகளை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களை தவிர வேறு இடங்களில் விலங்குகளை வெட்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மற்ற விலங்குகளின் கண் முன்  வெட்டக் கூடாது, ரத்தத்தை முறையாக சேகரிக்க வேண்டும், விலங்குகள் வெட்ட உருவாக்கப்பட்டுள்ள ஆடு தொட்டிகளில் கால்நடை மருத்துவர் சான்றளிக்கும் விலங்குகளை மட்டும் வெட்ட வேண்டும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வெட்டக் கூடாது எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த சட்ட விதிகளை மீறி, இறைச்சி கடைகளிலேயே விலங்குகள் வெட்டப்படுவதாகக் கூறி, விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு  தாக்கல் செய்து இருந்தார்.  அந்த மனுவில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளில் இந்த சட்ட விதிகள்  பின்பற்றப்படுவதில்லை என்றும் கடைகளின் பின்புறமே ஆடுகள் வெட்டப்படுவதாகவும்  அந்த மனுவில் குற்றம் சாட்டியிருந்தார். 

வெட்டப்படும் விலங்குகளின் ரத்தம், நேரடியாக கால்வாய்களில் கலக்கப்படுகிறது. கழிவுகள் குப்பை தொட்டிகளில் போடப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. எனவே மிருகவதை சட்ட விதிகளையும், உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்ட விதிகளையும் கண்டிப்புடன் பின்பற்ற சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில்  கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஶ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வு, குறிப்பிட்டு எந்த கடையில் ஆடுகள் வெட்டப்படுகின்றன எனக் கூறாமல் பொத்தாம் பொதுவாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி, அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User