ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க தாமதம் ஏன்? – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவது குறித்து உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

Sep 23, 2024 - 17:06
0 192
ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க தாமதம் ஏன்? – உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

வரும் அக்டோபர் 6 ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு ஊர்வலம் செல்ல அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். காவல்துறைக்கு கடிதம் எழுதி இருந்தது. ஆனால், நீண்ட நாட்களாகியும் அனுமதி பெறப்படாமலே இருந்ததால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அனுமதிக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று நடைபெற்றது. 

அப்போது, காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர்  அளித்த மனுக்களை பரிசீலித்து வருவதாகவும், 29ம் தேதிக்குள் முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.கார்த்திகேயன், ”உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி விதிமுறைகள் வகுக்கப்பட்ட பின்னரும் அணி வகுப்புக்கு அனுமதி வழங்கவில்லை” என குற்றஞ்சாட்டினார். 

இந்த நிலையில், “ஒவ்வொரு வருடமும் ஒரே வழித்தடத்தில் தான் அணி வகுப்பு நடைபெறுகிறது. அதற்கான விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்ட பின்னரும் அனுமதி வழங்குவதில் ஏன் தாமதம்” என்று நீதிபதி கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, விசாரணையை செப்டம்பர் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தார். 

மேலும், அனுமதிக்கோரிய விண்ணப்பங்கள் மீது பரிசீலித்து முடிவுகளை அறிக்கையாக தெரிவிக்க காவல்துறைக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User