மழை பாதிப்பு குறித்து நடவடிக்கை இல்லை- திமுகவை சாடிய தமிழிசை செளந்தரராஜன்

திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை என தமிழிசை சாடினார்

Oct 14, 2024 - 16:42
Updated: 2 years ago
0 202
மழை பாதிப்பு குறித்து நடவடிக்கை இல்லை- திமுகவை சாடிய தமிழிசை செளந்தரராஜன்

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பழனி மலைக்கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரும் சாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்லாத தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய், விஜயதசமிக்கு வாழ்த்து சொன்னது வரவேற்கத்தக்கது. இந்து மக்கள் உணர்வு குறித்து விஜய் உணர்ந்ததைப் போல விரைவில் தமிழக முதலமைச்சரும் உணர்ந்து இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உதயநிதியை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாக உள்ளனர் என்றும், கடந்த வருடம் பருவ மழையின்போது, சென்னை தத்தளித்த போது, 4000 கோடி ரூபாய் செலவு செய்ததாக விவகாரம் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் பருவமழை பெய்யத்துவங்கி உள்ளது. இதில் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலையில், அந்த 4ஆயிரம் கோடிரூபாய் நிதி விவகாரம் குறித்து தமிழக அரசு தெளிவான விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பாஜக மாநாடு நடத்தினாலோ, தவெக மாநாடு நடத்தினாலும் 21கேள்விகள் உள்பட பல விதிமுறைகளை காவல்துறை விதிக்கிறது. சென்னையில் ராணுவம் விமான சாகசம் நடத்தினால், பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று கனிமொழி சொல்கிறார். ஆனால் திமுக மாநாடு நடத்தினால் 21 கேள்விகளும் கேட்பதில்லை, விதிமுறைகளும் விதிப்பதில்லை, திமுக மாநாட்டிற்கு கூட்டம் கூடாமல் தவிர்க்க வேண்டும் என்றும் சொல்வதில்லை எனவும் தமிழிசை சௌந்திரராஜன் விமர்சனம் செய்தார். 

தொடர்ந்து மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசு இரட்டை நிலைப்பாடு எடுப்பதாகவும், தனியார் பள்ளிகளில் வசதி உள்ள குழந்தைகள் மூன்று மொழி படிக்கும் நிலையில், அரசு பள்ளிகளில் ஏழை குழந்தைகள் மூன்றாவது மொழி படிக்க தடை விதிக்கும் வகையில் தமிழக அரசு உள்ளது என சாடினார். மேலும், மும்மொழி கல்வி உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். 

முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை பழனி சார் ஆட்சியர் கிஷன்குமார் ரெட்டி தலைமையிலான அதிகாரிகள்  வரவேற்றனர்.  தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் ஆகிய இருவரையும், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் கனகராஜ் தலைமையிலான பாஜகவினர் வரவேற்றனர். தொடர்ந்து மலைக்கோவிலுக்கு சென்ற இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User