“அப்பா நேத்து நைட் கூட நல்லா பேசிட்டு இருந்தாரு.. ”- மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் மகன் உருக்கம்

நிறைய பணம் கொடுத்தால் இறந்தவர் போன்று நடிப்பீர்களா என்று கேட்பார்கள். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன் என்பேன் என மறைந்த டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Nov 10, 2024 - 10:54
Updated: 2 years ago
0 620
“அப்பா நேத்து நைட் கூட நல்லா பேசிட்டு இருந்தாரு.. ”- மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் மகன் உருக்கம்

நேத்து நைட் கூட நல்லா பேசிட்டு இருந்தாரு...திடீர்னு இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல என மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் மகன் மகாதேவன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு  திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் இறப்புக்கு முன்பு வரை நடித்துக் கொண்டிருந்ததாக அவரது மகன் மகாதேவன் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி கணேசனின் உடல்  அடக்கம் நாளை  செய்யப்படும் என அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

நடிகர் டெல்லி கணேஷ் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு மற்றும் சில உடல் நலக் குறைவுகள் இருந்தபோதும் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தவில்லை என அவரது மகன் தெரிவித்தார். தொடர்ந்து சீரியல்கள் வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றில் தொடர்ந்து நடித்து வந்ததாக கூறிய அவர், உறவினர்களின் வீட்டு நிகழ்ச்சிகளுக்கு செல்ல தவறினாலும், அவர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்க்க வில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார். கடந்த நான்கைந்து தினங்களாக உடல் சோர்வாக இருப்பதாக டெல்லி கணேஷ் தெரிவித்ததாகவும், நேற்று தூங்குவதற்கு முன்பு மருந்து கொடுத்த பின்னர் அவரது உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக அவரது மகன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நடிகர் டெல்லி கணேஷ் பேட்டி ஒன்றில் மரணம் குறித்து பேசியது தற்போது வைரலாகி வருகிறது.

இது குறித்து நடிகர் டெல்லி கணேஷ் கூறியதாவது,  “எனக்கு எவ்வளவு காசு கொடுத்தாலும் இறந்து போற மாதிரியான சீன்களில் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிடுவேன். என்னை படுக்கவைத்து மாலை போடுவது எல்லாம் ஒத்துக்கொள்ள மாட்டேன். யாரையோ படுக்க வைத்து மாலை போட்டுக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். நீங்கள் கொடுக்கும் காசுக்கெல்லாம் அதையெல்லாம் செய்ய முடியாதுன்னு சொல்லிவிடுவேன். நிறைய பணம் கொடுத்தால் பண்ணுவீர்களா என்று கேட்பார்கள். ஆனால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன் என்பேன். இறப்பு மேல யாருக்கு தான் பயம் இருக்காது. குறிப்பிட்ட தேதியில் இறந்துவிடுவேன் என சொன்னால் பயப்படாதவர்கள் இருக்க மாட்டார்கள். இறப்பு என்பது திடீரென்று வருவதுதான். மரணம் என்பது நிரந்தரமானது. அது தெரியாத வரைக்கும் நாம ராஜா தான்”என்று கூறியுள்ளார். 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User