வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி அடித்து கொலை… ? சென்னையில் கொடூரம்!

சென்னையில்  வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Nov 02, 2024 - 15:45
0 1.5
வீட்டு வேலை பார்த்து வந்த சிறுமி அடித்து கொலை… ? சென்னையில் கொடூரம்!

சென்னை அமைந்தக்கரை மேத்தா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முகமது நவாஷ். இவர் சொந்தமாக பழைய  கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றார். மேலும் இவருக்கு திருமணமாகி மனைவி நிவேதிதா மற்றும் 6 வயது குழந்தை உள்ளனர்.

இந்நிலையில் நவாஸ் வீட்டில் கடந்த ஓராண்டாக தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி தங்கி வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதாவது தீபாவளி தினத்தன்று நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமி வேலை முடிந்து பாத்ரூமில் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது நீண்ட நேரமாகியும் குளிக்க சென்ற சிறுமி வெளியே வராததால் சந்தேகமடைந்த நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா இருவரும் ஓடிச்சென்று  பாத்ரூம் கதவை தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி  தரையில் மயங்கிய நிலையில் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் பயத்தில் நவாஸ் வீட்டை பூட்டி விட்ட மனைவி குழந்தையுடன் உறவினர்கள் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நேற்று மாலை வீட்டு உரிமையாளர் முகமது நவாஸ் தனது வழக்கறிஞர் மூலம் சிறுமி இறந்தது குறித்து அமைந்தக்கரை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் போலீஸார் சம்பவயிடத்திற்கு சென்று நவாஸ் மற்றும் அவரது மனைவி நிவேதிதா முன்னிலையில் பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. 

மேலும் சிறுமி உடலில் அங்காங்கே  காயங்கள் இருந்தால் போலீஸாருக்கு மேலும் சந்தேகத்தை கிளப்பியது. இதனை அடுத்து போலீஸார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் முகமது நவாஸ் சகோதரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த  16 வயது சிறுமி அவரது வீட்டிற்கு வேலைக்கு வந்ததும், சிறுமியின் தந்தை காலமானதால் தாயின் அரவணைப்பில் சிறுமி வளர்ந்து வந்தது தெரியவந்தது. மேலும் குடும்ப சூழ்நிலை காரணமாக சிறுமி தனது தாயை பிரிந்து ஓராண்டாக முகமது நவாஸ் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் கணவன் மனைவி இருவரும் சிறுமியை அடித்து துன்புறுத்தியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து போலீஸார் கணவன் மனைவியிடம் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறார்களை வீட்டில் பணியமர்த்த கூடாது என சட்ட விதிகள் இருந்தும் நவாஸ் எப்படி 16 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு அமர்த்தினார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .மேலும் சிறுமி பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே இறப்பிற்கான உண்மையான காரணம் தெரிய வரும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 1
Angry Angry 0

Comments (0)

User