தம்பதி குழந்தையை கொலை செய்தத்தது ஏன்?கொலையாளிகள் சொன்ன திடுக்கிடும் தகவல்

சென்னை அடையார் பகுதியில் சாக்குமூட்டையில் ரத்தம் வழிந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், தற்போது மூன்று கொலைகள் நடந்திருக்கலாம் என்ற திடுக்கிடும் திருப்பத்தை எட்டியுள்ளது. மாயமான மனைவி மற்றும் குழந்தையின் உடல்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Jan 28, 2026 - 07:53
0 532
தம்பதி குழந்தையை கொலை செய்தத்தது ஏன்?கொலையாளிகள் சொன்ன திடுக்கிடும் தகவல்
கொலையாளிகள் சொன்ன திடுக்கிடும் தகவல்

கடந்த 26-ஆம் தேதி அடையார் இந்திரா நகர் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகன ஷோரூம் அருகே, கேட்பாரற்று கிடந்த சாக்குமூட்டை ஒன்றிலிருந்து ரத்தம் கசிவதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் அளித்தனர். விரைந்து வந்த அடையார் போலீசார், மூட்டையைப் பிரித்துப் பார்த்தபோது, சுமார் 24 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் கொடூரமான வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரது உடல் உடனடியாகப் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலை செய்யப்பட்டவர் யார் என்பதைக் கண்டறிய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இரண்டு இளைஞர்கள் பைக்கில் வந்து அந்தச் சாக்குமூட்டையை வீசிச் சென்றது உறுதியானது. இதற்கிடையில், கொலையுண்ட இளைஞரின் சட்டைப் பையில் இருந்த ஒரு காகிதத்தில் சில செல்போன் எண்கள் இருந்தன. அதில் ஒரு எண்ணைத் தொடர்பு கொண்டபோது, அது அடையாரில் உள்ள ஒரு செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரிந்தது. அங்கு நடத்திய விசாரணையில், கொலையுண்டவர் பீகாரைச் சேர்ந்த கவுரவ் குமார் என்பதும், அவர் தனது மனைவி முனிதா குமாரியுடன் அங்கு காவலாளி வேலை தேடி வந்ததும் உறுதி செய்யப்பட்டது.

தரமணியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த கவுரவ் குமார், அங்கேயே தங்கியிருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரது நெருங்கிய நண்பர் உள்ளிட்ட 7 பேரைப் பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, கவுரவ் குமாரின் மனைவி மற்றும் குழந்தையும் காணாமல் போனது தெரியவந்தது. பிடிபட்டவர்களிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கவுரவ் குமாரை மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தையையும் தாங்கள் கொலை செய்துவிட்டதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலையாளிகள் கொடுத்த தகவலின் அடிப்படையில், கொல்லப்பட்டதாகக் கூறப்படும் மனைவி மற்றும் குழந்தையின் சடலங்கள் எங்கே வீசப்பட்டன என்பதை அறிய போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். அடையாறு கெனால் ரோடு, கூவம் ஆற்றங்கரை, பெருங்குடி குப்பைக் கிடங்கு மற்றும் அடையாறு முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் சடலங்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், 2 வயது ஆண் குழந்தையின் சடலம் அடையாறு மத்திய கைலாஷ் ஆற்றங்கரை யோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கண்டெடுக்கப்பட்ட சடலம் கவுரவ் குமாரின் குழந்தையா என்றும் எதற்காக இந்தத் தொடர் கொலைகள் நடந்தன? முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்துப் பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 2

Comments (0)

User