இளையராஜா ரசிகராக வெங்கட்பிரபு… நட்புக்கு மரியாதை தரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு

'நண்பன் ஒருவன் வந்தபிறகு’ படத்தில் யுவன்சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி என 3 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள்.

Jun 17, 2024 - 17:02
0 411
இளையராஜா ரசிகராக வெங்கட்பிரபு… நட்புக்கு மரியாதை தரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு

மசாலா பாப்கார்ன் மற்றும் ஒயிட் ஃபெதர் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் ஐஸ்வர்யா.எம் மற்றும் சுதா.ஆர் இணைந்து தயாரிக்கும் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. இப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு பார்த்துப் பிடித்துப்போய் வெளியிடுவதோடு, ரசிகர்களுக்கு ‘Venkat Prabhu’s gift’ என்ற டேக் லைன் உடன் இப்படத்தை குறிப்பிட்டுள்ளது படக் குழுவினரை ஆனந்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தப் படத்தில் யுவன்சங்கர்ராஜா, ஜி.வி.பிரகாஷ், ஹிப்ஹாப் ஆதி என 3 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள்.


படத்தை இயக்கியிருக்கும் அனந்த் 'மீசையை முறுக்கு’ திரைப்படத்தில் ஆதியின் தம்பி கதாபாத்திரத்தில் நடித்தவர் இதில் இயக்குநராகவும், கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார்.அவருடன் இதில் ஆர்ஜே விஜய், பவானி ஸ்ரீ, யு டியூபர்கள் மதன் கௌரி, இர்பான், வில்ஸ்பேட், தேவ், மோனிகா, கே.பி.ஒய் பாலா, ஆர்ஜே ஆனந்தி, சபரிஷ், குகன், ஃபென்னி ஆலிவர், தர்மா, வினோத் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

தவிர லீலா, குமரவேல், விஷாலினி என்று நாம் நன்கறிந்த நடிகர்களுடன் தயாரிப்பாளர் ஐஸ்வர்யாவும் ஒரு ஆசிரியை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.ஏ.எச்.காஷிப் இசையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று இருக்கும் நிலையில், பத்திரிகையாளர்களுக்காக டிரைலரை அறிமுகப்படுத்தி படத்தின் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா, இயக்குநர் – நடிகர் அனந்த், இசையமைப்பாளர் ஏ.எச்.காஷீப், ஆர் ஜே விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படம் பற்றிப் பேசினார்கள்

படத்தில் நடித்துள்ள ஆர்.ஜே விஜய்,  பாடல் எழுதுவதற்காக தான் இயக்குநர் என்னை அணுகினார். பிறகு கதை பற்றி என்னிடம் சொன்ன போது, நானும் இதில் நடிக்கலாமே, அதற்கான வாய்ப்பு இருக்கிறதே என்று தோன்றியது. ஆனால், அதை எப்படி கேட்பது என்று தயங்கினேன். ஆனால், இயக்குநரும் என்னை நடிக்க வைக்க வேண்டும் என்று விரும்பினார். ஒரு வழியாக இருவரும் எங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தி விட்டோம், அப்படி தான் இந்த படத்தில் நான் நடிக்க வந்தேன். 
இந்த படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதில் ஒரு பாடலை தனுஷ் சாரும், மற்றொன்றை ஜி.வி.பிரகாஷ் சாரும் பாடியிருக்கிறார்கள்..!” என்றார்.


இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ்,ஹிப்ஹாப் ஆதி என 3 இசையமைப்பாளர்கள் பாடியிருக்கிறார்கள். தவிர, நடிகர் தனுசும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இவ்வளவு விஐபிகள் இந்த படத்தில் பாட காரணம் இருக்கிறது. ஆம், படத்துக்கு இசையமைப்பவர் ஏ.ஆர்.ரகுமான் தங்கை மகன் ஏ.எச்.காஷிப். இவர் ஏற்கனவே ஜோதிகா நடித்த ‘காற்றின் மொழி, மலையாளத்தில் மம்முட்டி நடித்த பதினெட்டாம் படி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தவிர, மாமா இசையமைப்பில் பெரிதும் ஹிட்டான முஸ்தபா, முஸ்தபா(காதல்தேசம்) பாடலையும் முறைப்படி ரைட்ஸ் பெற்று இந்த படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஏ.எச்.காஷிப். 

படத்தின் இயக்குனர் அனந்த்திடம், ‘‘இது இசை சம்பந்தப்பட்ட படமா என்று கேட்டால்’’, ‘‘இது நட்பு சம்பந்தப்பட்ட கதை. 1992 முதல் இன்று வரையிலான பலகட்ட நட்பை பேசுகிறது. நானே முதன்மை ரோலில் நடித்து இருக்கிறேன். இதற்கு முன்பு மீசைய முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதி தம்பியாக நடித்தேன். ஆர்.ஜே.மிர்ச்சி விஜய் , இர்பான், மோனிகா, வில்ஸ்பேட் தேவ், கேபிஓய் பாலா உட்பட பலர் இதில் நடித்துள்ளனர். இன்னொரு ஏ.ஆர்.ரகுமான் சம்பந்தமும் படத்தில் இருக்கிறது. அவர் மருமகள், ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானிஸ்ரீதான் ஹீரோயின். விடுதலை படம் மாதிரி இதுவும் பேசப்படும்.  

பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தம்பியாக வந்தது எனக்கு நல்ல பெயர் வாங்கி கொடுத்தது. நாளைய இயக்குநர்கள் ஐந்தாவது சீசனில் கலந்துக்கொண்டு இறுதிப் போட்டி வரை பயணித்திருக்கிறேன். நண்பன் என்ற குறும்படத்திற்காக விகடன் விருது பெற்றேன்.
பிறகு என் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி எழுத ஆரம்பித்தேன், அதுதான் இந்த கதை. இந்த கதை அனைவரின் வாழ்விலும் நடந்திருக்கும். இந்த கதையை கேட்டவர்கள் அனைவரும், இது என் வாழ்க்கையில் நடந்த சம்பவம் போல இருக்கிறதே..? என்று சொன்னார்கள்.

ஒரு நல்ல கதை தனக்கானதை தானாகவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார்கள், சென்னை 600028 போன்ற படங்களுக்கு அப்படி தான் நடந்ததாக சொன்னார்கள், அதுபோல தான் இந்த படத்திற்கான அனைத்து விசயங்களும் தானாகவே நடந்தது.வெங்கட் பிரபு சாரிடம் கதை சொன்ன போது, ”‘சென்னை 600028’ மூன்றாம் பாகத்திற்கான ஐடியாவாக இருக்கிறதே..?” என்று சொன்னது மட்டுமன்றி, தன்னுடைய பங்களிப்பும் இதில் இருக்க வேண்டும் என்பதற்காக, இந்தப் படத்தை அவர் வழங்குகிறார்.

அவரும் கவுரவ வேடத்தில் வருகிறார். அதுவும் இளையராஜா ரசிகராக வருகிறார். எனக்கு ஏ.ஆர்.ரகுமான் ரசிகர் கேரக்டர். எங்கள் உரையாடலில்தான் கதை தொடங்குகிறது. வெங்கட்பிரபு நண்பரான ஐஸ்வர்யாவிடம் ஒரு கல்லுாரி ஆசிரியர் வேடத்தில் நடிக்க அணுகிறேன். அவரே கதை நன்றாக இருப்பதால் தயாரிப்பாளரும் ஆகிவிட்டார். 


இது ஏதோ இளைஞர்களுக்கான படம் என்று நினைக்க வேண்டாம். 60 வயதுடையவர்கள் கூட இந்த கதையுடன் தங்களை தொடர்புப்படுத்திக் கொள்வார்கள், அவர்கள் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கும். ‘சென்னை 600028’, ‘அட்ட கத்தி’ போன்ற படங்கள் எப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதுபோல் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’ படமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.” என்றார்.நண்பன் ஒருவன் வந்தபிறகு படத்தை வெங்கட்பிரபு ‘வழங்கும்’ என்றுதான் வெளியிடுகிறோம். சென்னை28 மாதிரி நட்பு பற்றி, நண்பர்கள் பற்றி நிறைய பேசியிருக்கிறோம் விரைவி்ல் படம் ரிலீஸ் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User