வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்க சென்றவர்... மீளா துயரில் விட்டுச் சென்ற சோகம்! 

தனது கணவரின் உடலை மீண்டும் சொந்த ஊர் கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Feb 27, 2024 - 09:48
0 190
வறுமையில் இருந்து குடும்பத்தை மீட்க சென்றவர்... மீளா துயரில் விட்டுச் சென்ற சோகம்! 

பிரான்ஸிற்கு வேலைக்குச் சென்ற 15 நாளில் உயிரிழந்த பட்டுக்கோட்டையை சேர்ந்த தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டு வர உதவ வேண்டும் என உறவினர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள தளிக்கோட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சிலம்பரசன். 38 வயதான இவர், கடந்த 2014ம் ஆண்டு தணிகை என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 9 வயதில் தியாசினி என்ற மகளும் உள்ளார். சொந்த ஊரில் விவசாயம் செய்து வந்த சிலம்பரசனுக்கு, அதில் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டத்துடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்ட அவர், நண்பர்கள் உதவியுடன் கடந்த 12ம் தேதி பிரான்ஸ் சென்றார். கணவர் பிரான்ஸ் சென்றதால் குடும்பம் வறுமையில் மீண்டுவிடும் என நினைத்திருந்த மனைவி தணிகையை மீளா துயரத்தில் ஆழ்த்தும் தகவல் ஒன்று வந்து சேர்ந்தது. கடந்த 25ம் தேதி சிலம்பரசன் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்து விட்டார் என்ற செய்தி தான் அது.இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த சிலம்பரசனின் மனைவி மற்றும் பெற்றோர்கள் கதறி அழுதனர். 

இந்நிலையில், தனது கணவரின் உடலை மீண்டும் சொந்த ஊர் கொண்டு வருவதற்கு அரசு உதவி செய்ய  வேண்டும் எனக் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். குடும்ப வறுமையைப் போக்க வெளிநாடு சென்ற, 15 தினங்களுக்குள் சிலம்பரசன் உயிரிழந்த தகவல் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User