தஞ்சாவூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை-2 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள்

தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

Dec 30, 2023 - 18:25
0 206
தஞ்சாவூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை-2 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள்

தஞ்சாவூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் விதித்து தஞ்சை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் பகுதி சேர்ந்த 8 வயது மற்றும் 9 வயதுடைய இரண்டு சிறுமிகள் இருவரும் தோழிகள். இவர்கள் இருவரும் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்கள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு மாலை நேரத்தில் காவிரி கரையோரத்தில் விளையாட செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம் அவர்கள் இருவரும் விளையாட சென்றபோது கும்பகோணம் மேலக்காவேரி செக்கடியை சேர்ந்த தொழிலாளர்களான செல்வம்(65) முருகன் வயது(60) ஆகியோர் இந்த சிறுமிகளை அழைத்து பேசி உள்ளனர்.

அப்போது அந்த சிறுமிகளுக்கு சாக்லேட் மற்றும் தின்பண்டங்கள் வாங்கி கொடுத்து இருவரும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். தொடர்ந்து அந்த சிறுமிகள் விளையாட வரும்போது எல்லாம் இரண்டு சிறுமிகளுக்கு மாறி மாறி தொழிலாளர்கள் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.இதை வீட்டில் சொல்லக்கூடாது எனவும் உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி தருவதாகவும் அந்த சிறுமிகளிடம் அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவத்தன்று காவிரி ஆற்றங்கரை பகுதியில் இருந்து இரண்டு சிறுமிகள் வருவதை பார்த்த பெண் தொழிலாளி ஒருவர் இந்த நேரத்தில் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று சத்தம் போட்டு உள்ளார்.இதனால் அந்த சிறுமிகள் அழுது கொண்டே வீட்டிற்கு வந்துள்ளனர்.அவர்கள் அழுது கொண்டு வருவதை பார்த்த பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது இருவரும் தங்களை பெண் தொழிலாளி சத்தம் போட்டதாக கூறியுள்ளனர்.

 அதைக் கேட்ட அவர்களது பெற்றோர் காவிரி ஆற்றங்கரைக்கு எதற்காக நீங்கள் இருவரும் சென்றீர்கள் என கேட்டனர். அப்போது தொழிலாளர்கள் இருவரும் தங்களிடம் தவறாக நடந்ததை குறித்து அந்த சிறுமிகள் கூறியுள்ளனர். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமிகளின் பெற்றோர் இது குறித்து கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி விசாரித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செல்வம் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

பின்னர் அவர்களை தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி சுந்தர்ராஜன் விசாரித்து செல்வம், முருகன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் 10 ஆயிரம் அபராதம் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரை செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User