ரூ.4 கோடி பணம் பறிமுதல்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு... நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?
நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்தக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 6ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்ட நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.4 கோடியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் பணம் எனவும் வாக்காளர்களுக்குக் கொடுக்க எடுத்துச் சென்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்தனர்.
இதற்கு நயினார் நாகேந்திரன் முற்றிலும் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் நெல்லையில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இதுதொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அதில் புகார் குறித்து தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறைக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
நெல்லை காங்கிரஸ் வேட்பாளர், பாஜக வேட்பாளர் என இருவரையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஏப்ரல் 18) மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்டபின், நயினார் நாகேந்திரன் தொடர்பான புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் நெல்லையில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்துள்ளார் நயினார் நாகேந்திரன். தேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் நடவடிக்கை நயினார் நாகேந்திரனுக்கு சிக்கலாகுமா?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
1




Comments (0)