ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகம்.. திறந்து வைத்தார் பிரதமர் மோடி
பீகாரில் ரூ.1749 கோடியில் கட்டப்பட்ட பல்கலைக்கழகத்தின் புதிய வளாகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்
பீகார் மாநிலம் ராஜ்கீரில் உள்ள நாளந்தா பல்கலைக்கழகத்தில் புதிய வளாகம் நிறுவப்பட்டுள்ளது. உலகின் மிக பழமையான பல்கலைக்கழகம் என்ற சிறப்பு பெற்றது நாளாந்த பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் மீண்டும் புனரமைக்கப்பட்டு இன்று திறப்பு விழா கண்டுள்ளது.இந்த நிகழ்வில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர வி. அர்லேகர், முதல்வர் நிதிஷ் குமார், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் 17 நாடுகளின் தூதர்களும் கலந்து கொண்டனர்.
இந்த புதிய வளாகம் நாளந்தாவின் பழங்கால இடிபாடுகள் உள்ள இடத்திற்கு அருகே அமைந்துள்ளது.பழமையான நாளந்தா பல்கலைக்கழகம் யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட்டு வருகிறது அதனையும் இன்று பிரதமர் மோடி பார்வையிட்டார்.
பல்கலைக்கழக பேராசியர்களுடன் பிரதமர் மோடி குரூப் போட்டோ எடுத்து கொண்டனர். இதனையடுத்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றை நட்டார். இது தொடர்பாக, எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் ,நாளந்தா பல்கலை நமது புகழ்பெற்ற கடந்த காலத்துடன் வலுவான தொடர்பைக் கொண்டுள்ளது. இளைஞர்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இந்தப் பல்கலைக்கழகம் நிச்சயமாக நீண்ட தூரம் செல்லும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திறப்பு விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாளாந்தா பல்கலைக்கழகத்தின் சிறப்புகளை எடுத்துக்கூறினார்.நமது கலாச்சார பரிமாற்ற திட்டங்களுக்கான முக்கிய மையமாக நாளந்தா பல்கலைக்கழகம் விரைவில் மாறும் என்று கூறினார். ‘ஆசியான்-இந்தியா பல்கலைக்கழக வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் நாளந்தா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு கலைப் படைப்புகளின் ஆவணப்படுத்தல் இங்கு மேற்கொள்ளப்படுகிறது என்று கூறிய மோடி பொதுவான காப்பக வள மையமும் இங்கு நிறுவப்படுகிறது.
நாளந்தா பல்கலைக்கழகம் ஆசியான்-இந்தியா பல்கலைக்கழக வலையமைப்பை உருவாக்கும் நோக்கில் செயல்படுகிறது. பல முன்னணி உலகளாவிய நிறுவனங்கள் இணைந்துள்ளன, மேலும் 21 ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்று அழைக்கப்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாளந்தா ஒரு காலத்தில் இந்தியாவின் கல்வி அடையாளத்தின் மையமாக இருந்தது. கல்வி என்பது எல்லைகள், லாபம், நஷ்டம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டது.கல்வியே நமது எண்ணங்களையும் நடத்தைகளையும் வடிவமைக்கிறது. பண்டைய காலங்களில், நாளந்தா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை மாணவர்களின் தேசியத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை. பல்வேறு தரப்பு மக்களும் கல்வி கற்க இங்கு வந்து செல்கின்றனர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
நாளந்தா ஒரு அடையாளம், ஒரு மரியாதை. நாளந்தா நமது மதிப்பு, நமது மந்திரம், நமது பெருமை, நாளந்தா இந்த உண்மையைப் பிரகடனப்படுத்துகிறது என்று மோடி கூறினார். புத்தகங்கள் தீப்பிழம்பில் எரியக்கூடும் ஆனால் நெருப்புச் சுடர் அறிவை அழிக்க முடியாது என்றும் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)