18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இனி ஆதார் அட்டை கிடையாது : மாநில முதல்வர் அறிவிப்பு
''அசாமில், சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்கும் நோக்கில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இனி, ஆதார் அட்டை வழங்கப்படாது,'' என, அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா அறிவித்துள்ளது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடகிழக்கு மாநிலமான அசாமில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில், மாநில அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியதாவது: அசாமில் இனி, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட மாட்டாது. விதிவிலக்கான சூழலில், சம்பந்தப்பட்ட மாவட்ட கமிஷனர் மாநில அரசுக்கு பரிந்துரை அனுப்ப வேண்டும்.
அதன்பின், விண்ணப்பதாரர் தகுதியானவரா என்பதை மாநில அரசு முடிவு செய்து ஆதார் அட்டை வழங்கும். மாநிலத்தின் சில மாவட்டங்களில், ஆதார் அட்டை வழங்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. இவ்வளவு அதிகமான அட்டைகள் யாரிடம் உள்ளன என்பதை கண்டறிய வேண்டியது அவசியம்.
வங்கதேசத்திலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் ஆதார் அட்டையை பெறுவதை தடுப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம். அதே சமயம், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து ஆதார் அட்டைகள் வழங்கப்படும். ஏனெனில், அவர்களில் பலர் இன்னும் ஆதார் அட்டை பெறவில்லை. எனினும், இந்த விதிவிலக்கு 2027 ஏப்., 1 உடன் முடிவுக்கு வரும். அதன்பின், இந்த சமூகங்களைச் சேர்ந்த, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)