நாட்டை உலுக்கிய கர்நாடகா பாலியல் வழக்கு.. ரேவண்ணாவுக்கு 14ம் தேதி வரை சிறை !

கர்நாடகாவில் JDS எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா 300 பெண்களுடன் நெருக்கமாக இருந்த 3000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியான நிலையில், பாதிக்கப்பட்டவரை கடத்தியதாக அவரது தந்தையும் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ரேவண்ணாவுக்கு 14ம் தேதி வரை நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

May 08, 2024 - 15:57
0 732
நாட்டை உலுக்கிய கர்நாடகா பாலியல் வழக்கு.. ரேவண்ணாவுக்கு 14ம் தேதி வரை சிறை !

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் அவரது ஜே.டி.எஸ் கட்சியைச் சேர்ந்தவருமான பிரஜ்வால் ரேவண்ணா கர்நாடகாவின் ஹசன் தொகுதி எம்.பியாக இருந்து வருகிறார். மீண்டும் அதே தொகுதியில் அவர் போட்டியிட்ட நிலையில், ஏப்ரல் 26ம் தேதி வாக்குப்பதிவை முடித்துக் கொண்டு ஜெர்மனிக்கு பிரஜ்வால் சென்றடைந்தார். இந்நிலையில்தான், 300க்கும் மேற்பட்ட பெண்களுடன் நெருக்கமாக இருந்த ஏறத்தாழ 3,000 வீடியோக்கள் அடங்கிய பென்டிரைவ் பேருந்துநிலையங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போடப்பட்டிருந்தன. அந்த வீடியோக்களை வைத்து மிரட்டி பெண்களை மீண்டும் மீண்டும் வன்புணர்வு செய்ததும் தெரியவந்தது.

68 வயது மூதாட்டி உட்பட தன்னை விட்டு விடுமாறு கதறிய காட்சிகளும் அதில் பதிவாகியிருந்ததாக கூறப்பட்டது. சில வீடியோக்களில் தேவகவுடாவின் மகனும் பிரஜ்வாலின் தந்தையுமான ஹெச்.டி.ரேவண்ணாவும் இருந்ததாக தகவல் வெளியானது. தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒரு பெண் அளித்த புகாரின் பேரில் வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில், பிரஜ்வால் எந்தத் திசையில் இருந்தாலும் கைது செய்யப்படுவார் என முதலமைச்சர் சித்தராமையா அறிவித்தார்.

இந்நிலையில் பிரஜ்வாலை காப்பதற்காக அவரது தந்தை ரேவண்ணா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மே 2ம் தேதி தனது வீட்டு பணிப்பெண்ணை கடத்தியதாக H.D.ரேவண்ணா மீது புகாரளிக்கப்பட்டது. தனது தாயை அவர் கடத்திச் சென்றதாக மகன் அளித்த புகாரின் பேரில் சிறப்புப் புலனாய்வுக்குழு H.D.ரேவண்ணா மீது வழக்குப்பதிவு செய்தது. விசாரணையில் வெளியான தகவல்களின்படி, 5 ஆண்டுகளாக ரேவண்ணாவின் வீட்டில் பணியாற்றிய ஒரு பெண் 3 ஆண்டுகளுக்கு முன் வேலையை விட்டு நின்றுள்ளார். பிரஜ்வாலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களில் அவரும் ஒருவர் என கூறப்படும் நிலையில், வீடியோக்கள் வெளியான அடுத்த நாளே, அதாவது ஏப்ரல் 26ம் தேதி ரேவண்ணாவின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் போபண்ணா அந்த பெண்ணை திடீரென அவரது வீட்டிலிருந்து அழைத்துச் சென்றுள்ளார்.

அதே நாளில் திருப்பி வீட்டில் விட்டுச் சென்றபோதும், ஏப்ரல் 29ம் தேதி அவர் மீண்டும் அழைத்துச்செல்லவே அன்றில் இருந்து பெண் மாயமானார். தொடர்ந்து ஏப்ரல் 3ம் தேதி சதீஷ் போபண்ணா கைது செய்யப்படவே, மைசூருவில் ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மே 4ம் தேதி ரேவண்ணாவை சிறப்பு விசாரணைக்குழு அதிரடியாக கைது செய்தது. இந்நிலையில் மே 14ம் தேதி வரை அவரது நீதிமன்றக்காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 2
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User