இந்தியா கூட்டணி “கதம் கதம்”   ஜூன் 8-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு இல்லை: திமுக அறிவிப்பு  

ஜூன் 8-ம் நடக்கும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காது என அறிவித்துள்ளதால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Jun 04, 2026 - 12:17
Updated: 2 months ago
0 465
இந்தியா கூட்டணி “கதம் கதம்”   ஜூன் 8-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு இல்லை: திமுக அறிவிப்பு  
இந்தியா கூட்டணி திமுக திடீர் அறிவிப்பு

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்: டெல்லி "கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா" கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான அனைத்திற்கும் தொடக்கம் முதலே, முதல் அரசியல் இயக்கமாகத் துணிச்சலுடன் எதிர்த்து நின்றது. 

அதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக ரீதியில் நாடாளுமன்றத்திலும், ஆட்சியில் இருந்த நேரத்தில் சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், உரிய நேரத்தில் நீதிமன்றங்களிலும் எடுத்து வைத்து வாதாடியும், போராடியும் வந்திருக்கிறது. "இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அக்கூட்டணியின் மையச் சக்தியாக திராவிட முன்னேற்றக் கழகம் இயங்கியது. திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் தான் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்தார். 

இது இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும் அக்கட்சிகளின் தலைவர்களும் நன்கு அறிவார்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இழைத்த துரோகத்தினால் மிகுந்த மனக்காயமுற்றிருக்கும் கழகத் தோழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கின்ற வகையில், வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கூட்டத்தில், அதாவது காங்கிரஸ் பங்கேற்கும் கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்காது.

இக்கூட்டத்தில் பங்கேற்காத அதேநேரத்தில் இந்தக் கூட்டத்தில் இடம்பெற்றுள்ள மற்ற கட்சிகள் முன்வைக்கும் நாட்டு நலனைப் பாதிக்கும் பிரச்சினைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் குரல் கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ள நிலையில், திமுகவின் இந்த அறிக்கை இந்தியா கூட்டணிக்கு திமுக முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 2
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User