பகலில் அனல், இரவில் புழுக்கம்.. தமிழ்நாட்டுக்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், கடும் வெயிலால் வெப்பம்  43 டிகிரி செல்சியஸ் வரை வீசக்கூடும் என எச்சரித்துள்ளது. 

May 01, 2024 - 10:21
0 615
பகலில் அனல், இரவில் புழுக்கம்.. தமிழ்நாட்டுக்கு 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்

தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுமைக்குமே இந்த நிலைதான். குறிப்பாக கிழக்கு மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பகல் மட்டுமின்றி இரவிலும் சூடான காலநிலை உணரப்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி இரவில் இயல்பை விட 6 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரித்துள்ளது. இதனால் இரவில் புழுக்கமாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சமீப காலமாக தமிழகத்தில் 34 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகி வருகிறது. இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை அதிர்ச்சிக்குள்ளாக்க வைக்கிறது. 

இந்தியா முழுமைக்குமான வானிலை ரிப்போர்ட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (மே1 ) இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே போல அடுத்த 5 நாட்களுக்கும் இயல்பை விட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரித்து, வெப்ப அலையும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இதனால், வெப்பம் 40ல் இருந்து 43 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப அலையும் வீசுவதால் மதியம் 12 மணி முதல் 3 மணி வரையில் வெளியே செல்வதையும் பொதுமக்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  

இந்தாண்டு இயல்புக்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் உக்கிரமாக உள்ளது. காலை 7 மணி முதலே வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் மக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர். குறிப்பாக வெளியே சென்று வேலை பார்ப்பவர்கள் கடும் வெயிலால் சோர்வடைகின்றனர். இதனால் பல பொது இடங்களில் ORS கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 

பலர் கோடை வெயிலை சமாளிக்க முடியாமல், மலைப்பிரேதசங்களுக்கு படை எடுக்கும் நிலையில், வெளியூர் செல்ல முடியாதவர்கள் வருண பகவான் கருணையால் கோடை மழை பெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

தொடர்ந்து வானிலை அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு கீழடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவுவதால், மே 2 முதல் மே 5 வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் பகல் நேரங்களில் வெயியே சுற்ற வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User