திமுக விருப்ப மனு ரூ 20 கோடி வசூல்: ஸ்டாலின், உதயநிதிக்கு அதிகம்,  அமைச்சர்களுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் இல்லை 

திமுக சார்பில் விருப்பமனு பெற்ற வகையில் ரூ.20 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. ஸ்டாலின், உதயநிதி பெயரில் அதிகம் பேர் விருப்பமனு அளித்தனர். ஆனால் அமைச்சர்களுக்கு எதிராக அந்த தொகுதிகளில் யாரும் மனு அளிக்கவில்லை என்பது குறி்ப்பிடதக்கது.

Mar 07, 2026 - 03:21
0 483
திமுக விருப்ப மனு ரூ 20 கோடி வசூல்: ஸ்டாலின், உதயநிதிக்கு அதிகம்,  அமைச்சர்களுக்கு எதிராக விருப்பமனு தாக்கல் இல்லை 
துணைமுதல்வர் உதயநிதி காஞ்சிபுரத்தில் போட்டியிட காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ் விருப்பமனுதாக்கல்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மாதம் 20-ந்தேதி தொடங்கியது. ரூ.1,000 விண்ணப்பபடிவ கட்டணத்துடன் பொதுத்தொகுதிக்கு ரூ.25 ஆயிரம், மகளிர், தனித்தொகுதிக்கு ரூ.15 ஆயிரம் என்று விருப்ப மனு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தினமும் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் படைசூழ வந்து ஆர்வத்துடன் விருப்ப மனு அளித்து வந்தனர். விருப்ப மனு அளிப்பதற்கு மார்ச் 2-ந்தேதி கடைசி நாள் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் விருப்ப மனுவுக்காக கால அவகாசம் நேற்று வரை நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 14 நாட்களாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த விருப்ப மனு வினியோகம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. வரலாறு காணாத வகையில் 15,372 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இதில் முதல்வர் ஸ்டாலின் பெயரில் மட்டும் 1,473 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் அதிகமான மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளது.

ஒரு மனுவின் கட்டணம் 1,000 ரூபாய். பூர்த்தி செய்த விண்ணப்ப கட்டணமாக பொதுத்தொகுதிக்கு, 25 ஆயிரம் ரூபாய், தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாய் என வசூலிக்கப்பட்டது. அந்த வகையில், 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில், தி.மு.க.,வில் இணைந்த முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், போடிநாயக்கனூர் தொகுதிக்கும், அவரது மகன் ரவீந்திரநாத், ஆண்டிபட்டி தொகுதிக்கும் விருப்ப மனு அளித்தனர். திருவண்ணாமலை தொகுதியில், மீண்டும் போட்டியிட அமைச்சர் வேலு, கரூர் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட ஏராளமான தி.மு.க.,வினர் நேற்று, விருப்ப மனுக்கள் அளித்தனர்.

தற்போதைய அமைச்சர்களின் 90 சதவீதம் தொகுதிகளில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் தவிர, நிர்வாகிகள் விருப்ப மனுக்கள் அளிக்கவில்லை.உட்கட்சி ரீதியாக அமைச்சர்களுக்கு எதிர்ப்பு இருக்கும் தொகுதிகளில் மட்டும் சிலர் மனு அளித்துள்ளனர். ஆனால், மதுரையில் அமைச்சர் தியாகராஜனின் மத்திய தொகுதியில், நகர தி.மு.க., நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான நிர்வாகிகள் விருப்ப மனுக்களை அளித்து இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User