போதைப்பொருள் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட் 

ஊக்க மருந்து பயன்படுத்திய புகாரில் உத்தராகண்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ராஜன் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த விவகாரம் அம்மாநில கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Jan 06, 2026 - 11:33
0 398
போதைப்பொருள் பயன்படுத்திய கிரிக்கெட் வீரர் சஸ்பெண்ட் 
Cricketer suspended for drug use

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ராஜன் குமார் , ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்ததையடுத்து, அவருக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவரது மாதிரியில் Drostanolone, Metenolone ஆகிய அனபோலிக் ஸ்டெராய்டுகளும், Clomifene என்ற தடைசெய்யப்பட்ட மருந்துகளை உட்கொண்டதாக சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

வழக்கமாக பெண்களுக்கு மலட்டுத்தன்மை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Clomifene, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் என்பதால் விளையாட்டுப் போட்டிகளில் இதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 8, 2025 அன்று டெல்லிக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் கடைசியாக விளையாடிய ராஜன் குமாரின் கிரிக்கெட் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

இதற்கு முன்பு 2019-ல் பிருத்வி ஷா மற்றும் 2020-ல் மத்தியப் பிரதேச ஆல்ரவுண்டர் அன்ஷுலா ராவ் ஆகியோர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கித் தடையைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. விளையாட்டுத் துறையில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் உறுதி செய்ய இந்திய அரசு எடுத்து வரும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள், இளம் வீரர்களிடையே எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

முகமது சமிக்கு சம்மன் 

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தின் அடிப்படையில் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டபோதும், விவரங்கள் போதுமானதாக இல்லை என ஒரு கோடி பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதன்படி, கொல்கத்தாவில் வாக்குரிமை பெற்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரரான முகமது ஷமிக்கும் தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. எஸ்.ஐ.ஆர்.படிவத்தை முகமது ஷமி சரியாக பூர்த்தி செய்யவில்லை என கூறப்படும் நிலையில், உரிய ஆவணங்களுடன் வரும் 9-ஆம் தேதியில் இருந்து 11-ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடியில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

உத்தரப்பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட முகமது ஷமி, கிரிக்கெட்டுக்காக சிறு வயதிலேயே கொல்கத்தாவில் குடியேறிவிட்டார். முகமது ஷமியின் சகோதரர் முகமது கைப்-க்கும் தேர்தல் ஆணையம் தரப்பில் சம்மன் அனுப்பி உள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 1

Comments (0)

User