அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Feb 18, 2026 - 07:19
0 352
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் : சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் முதல் பகுதியை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

இந்த அறிக்கையின் நகலை சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு வழங்கி, முதல்வர் பேசியதாவது: அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை. இன்னும் எத்தனை நாள்கள்தான் அவர்கள் கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இருக்க வேண்டும். இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் பூனைக்கு மணி கட்டியுள்ளோம்.

அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. மற்ற மாநில அரசுகளின் உள்ளத்திலும் இதுதான் இருக்கின்றன.

மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.மத்திய - மாநில அரசுகளின் உறவுகள் குறித்து ஆராய உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழுவை தமிழக அரசு நியமித்தது. அந்தக் குழு தனது அறிக்கையை கடந்த 16ஆம் தேதி வழங்கியுள்ளது.

மாநில சுயாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி மலர வேண்டும். இது தனிப்பட்ட அரசியல் கட்சியின் கோரிக்கை அல்ல, இந்திய மக்களின் வாழ்வியல் கோரிக்கை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படை. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.

கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. நாம் முயன்றால் மீண்டும் திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் முயற்சியைத் தொடங்க வேண்டும். அதிகாரமும் வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது, பரவலாக வேண்டும்.

கூட்டாட்சி கொண்டதாக இந்திய அரசியலமைப்பை மாற்றுவது மத்திய அரசை பலவீனப்படுத்தாது என்று அறிக்கை கூறுகிறது. ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை செயல்படவிடாமல் தடுப்பது, ஜி.எஸ்.டி., ஹிந்தி திணிப்பு, கல்வி நிதி அனைத்துக்கும் ஒரே மருந்து மாநில சுயாட்சிதான்.

நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையிலும், மக்களவையிலும், இந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்.

மத்திய அரசும் மாநில அரசும் போட்டியாளர்கள் அல்ல. இருவரும் பொது அமைப்பின் பங்குதாரர்கள். மாநிலங்கள் வளர்ந்தால்தான் மத்திய அரசு வளரும்” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User