அரவிந்த் கெஜ்ரிவால் கைது – கடலூரில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
பாஜக பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றச்சாட்டு.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து கடலூரில் ஆம்ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று முன்தினம் (மார்ச் 21) அமலாக்கத்துறை கைது செய்தது. தொடர்ந்து அவருக்கு வரும் 28-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியில் முக்கியத் தலைவராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் கைது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட I.N.D.I.A கூட்டணித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அமலாக்கத்துறையை ஏவி பாஜக பழிவாங்குவதாகக் கூறி நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து கடலூரில் ஆம் ஆத்மி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கட்சியின் சின்னமான துடைப்பத்தை கையில் ஏந்தி அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாஜக அரசைக் கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)