உதயநிதி டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள்- அமைச்சர் முத்துசாமி கேள்வி

அ.தி.மு.க.வினர் கையில் பச்சை குத்திகொண்டு இருக்கிறார்களே அதை குற்றமாக சொல்லலாமா?

Oct 09, 2024 - 22:02
0 261
உதயநிதி டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள்- அமைச்சர் முத்துசாமி கேள்வி

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அ.தி.மு.க.வினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்தில் 3.52 கோடி ரூபாய் மதிப்பிலான 8 புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி, ஈரோடு பெரும்பள்ளம் ஓடை அணைக்கட்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்க்கால் பாசனத்திற்கான தண்ணீரை, திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “வீட்டு வசதி வாரியத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நோட்டீஸ் வழங்கி ஆண்டு கணக்கில் பயன்படுத்தாமல் இருந்த 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் அவர்களுக்கே வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விடுவிக்கப்பட உள்ளது. பகுதி அளவு நிலங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்ட இடங்களிலும் பணம் செலுத்தினால், அவர்களுக்கே கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டு வசதி வாரியத்தில் உள்ள அனைத்து பிரச்னையும் 6 மாத காலத்துக்குள் முடிக்கப்படும். இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் 4 லட்சம் குடும்பத்தினர் பயன் அடைவார்கள் என்றார். 

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் ஏன் அ.தி.மு.க.வினர் பயப்படுகிறார்கள் என தெரியவில்லை என்றும், அ.தி.மு.க.வினர் கையில் பச்சை குத்திகொண்டு இருக்கிறார்களே அதை குற்றமாக சொல்லலாமா? என்றும் கூறிய அமைச்சர் முத்துசாமி,  அரசின் மீது குற்றம் எதையும் கண்டுபிடிக்க முடியாத காரணத்தால் இதனை குற்றமாக சொல்லி வருவதாக தெரிவித்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி கொண்டு வந்த டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விற்பனைக்கு ரசீது போடுவது, 500 சதுர அடியில் கடை அமைப்பது போன்ற திட்டங்களை தான், மதுவிலக்கு துறையில் இருந்த போது செயல்படுத்தியதாகவும், தற்போது அவரிடம் அந்த துறை திரும்ப சென்றுள்ளதால் அவர் சிறப்பாக செயல்படுவார் என்றும் கூறினார். 

மேலும், அமைச்சர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதில் சீனியர் அமைச்சர், ஜூனியர் அமைச்சர் என்ற வித்தியாசம்  கிடையாது என்றும், குறிப்பாக  நீலகிரி மாவட்டம் அருகில் இருப்பதால் அமைச்சர் சாமிநாதனுக்கு பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், அமைச்சர் சாமிநாதன் தி.மு.க. மாவட்ட செயலாளராக இல்லாததால் , அவரால் அந்த பொறுப்புகளை சிறப்பாக பணியாற்ற முடியும் என்றும்,  ஏற்கனவே கோவை மாவட்டம் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்தபோது, அதில் ஏற்பட்ட சிரமத்தை உணர்ந்துள்ளதாக கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User