Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் லோகேஷ் கனகராஜ்... லேட்டஸ்ட் அப்டேட்!

சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Aug 27, 2024 - 18:23
0 416
Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் - சுதா கொங்கரா கூட்டணியில் லோகேஷ் கனகராஜ்... லேட்டஸ்ட் அப்டேட்!
சிவகார்த்திகேயனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படத்தில் பிஸியாக உள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் உறுதியாகிவிடும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்களை வெங்கட் பிரபு, சுதா கொங்கரா ஆகியோர் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் முதலில் நடிக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கவுள்ளது தற்போது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

மாநகரம் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார். தற்போது ரஜினியின் கூலி படத்தை இயக்கி வரும் லோகேஷ், ஸ்ருதிஹாசனின் இனிமேல் என்ற ஆல்பத்தில் நடித்திருந்தார். அதேபோல் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் படத்திலும் அவர் கேமியோவாக நடித்திருந்தார். இதனால் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்துவார் என செய்திகள் வெளியாகின. அது தற்போது சிவகார்த்திகேயன் – சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படம் மூலம் உண்மையாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் சுதா இயக்கவிருந்த புறநானூறு திரைப்படம் ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வந்தது. இப்படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா நஸிம், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோரும் நடிக்கவிருந்தனர். 1960களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை பின்னணியாக வைத்து புறநானூறு படத்தை இயக்கவிருந்தார் சுதா. ஆனால் சூர்யா இதிலிருந்து விலகியதால் தற்போது சிவகார்த்திகேயன் இப்படத்தில் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக ஸ்ரீலீலாவும், வில்லன் கேரக்டரில் லோகேஷ் கனகராஜ்ஜும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் போட்டோ ஷூட் முடிந்துவிட்டதாகவும், அதில் லோகேஷ் கனகராஜ்ஜும் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகவுள்ள புறநானூறு ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் எனவும் சொல்லப்படுகிறது. சூர்யாவுக்காக ரெடியான கதையில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளது ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்திற்குப் பின்னர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம் சிவகார்த்திகேயன். இதுவும் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் எனலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User