நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து - சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் இன்று விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

Oct 07, 2024 - 18:33
0 573
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து - சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் ஆஜராகததால் வழக்கின் விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து வந்தார். இருவீட்டார் சம்மதத்துடன், தனுஷ்-ஐஸ்வர்யா திருமணம் கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி சென்னையில் நடந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 20 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2022-ம் ஆண்டு இருவரும் எக்ஸ் தளப்பக்கத்தில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்சினையை தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். ஆனால் இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். அதில் 2004-ம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். 

இந்த மனு முதன்மை  குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா வழக்கில் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கின் விசாரணை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User