என்னம்மா இப்படி பண்றீங்களம்மா ! ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் போலீஸ் தவிப்பு 

8-வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகினறனர். இதே போன்று தூய்மை பணியாளர்களும் தங்களது போராட்ட களத்தை மாற்றி காவல்துறையினரை தூங்கவிடாமல் செய்து வருகின்றனர். 

Jan 02, 2026 - 12:04
0 228
என்னம்மா இப்படி பண்றீங்களம்மா ! ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டத்தால் போலீஸ் தவிப்பு 
The police are worried due to the protest of teachers and sanitation workers

குமரகுருபரன் வீடு முற்றுகை 

சென்னை மாநகராட்சியில் தனியார் மயம் நடவடிக்கை கைவிட வேண்டும், பணி நிரந்தரம் வலியுறுத்தி மாநகராட்சி ஆணையாளர் வீட்டை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர். 

சென்னை மாநகராட்சியில் திரு.வி.க நகர், ராயபுரம் மண்டலத்தில் தனியார்மயம் கைவிட வேண்டும் என தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று கீழ்ப்பாக்கம் கார்டன் பகுதியில் இருக்கும்  சென்னை மாநகராட்சி ஆணையாளர் குமரகுருபரன் வீட்டை  முற்றுகையிட முயற்சித்தனர்.

இதனால் முன்கூட்டியே காவல்துறையினர் கூடுதலான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர். அதேபோல் ஆசிரியர்கள், செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் அரசு ஏன் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என கேள்வி எழுப்பினர். 

ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து சமூக நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

8-வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம் 

அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ., வளாகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டார கல்வி அலுவலகம் என, அரசு துறை அலுவலகங்களில் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

8வது நாளாக இன்றும் (ஜனவரி 02) இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர். சென்னை எழும்பூரில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் சாலை மேம்பாலத்தில், குழந்தைகளுடன் போராட்டம் நடத்தினர்.

திமுகவின் 311வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை, போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். ஆசிரியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் கண்ணனை கைது செய்து போலீசார் வலுக்கட்டாயமாக ஏற்றினர். அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User