ஓட்டுநர்களை அச்சுறுத்தும் ரோடு.. கழன்று ஓடும் சக்கரங்கள்.. கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ

மிகவும் பாதிப்படைந்து பயணிக்க முடியாத நிலையில் இருக்கும் சாலையால் மக்கள் கடும் அவதி !

Apr 20, 2024 - 10:32
Updated: 2 years ago
0 316
ஓட்டுநர்களை அச்சுறுத்தும் ரோடு.. கழன்று ஓடும் சக்கரங்கள்.. கண்டுகொள்ளாத எம்.எல்.ஏ

பழைய பங்களாவீட்டில் பேய் இருப்பதாகக்கூறி செல்லவே பயப்படும் மக்களை போல, ஒரு சாலைக்கு வாகனஓட்டிகள் அஞ்சும் சம்பவம் தென்காசியில் நிகழ்ந்து வருகிறது. அந்த தாறுமாறான தார் சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்கள் தொடர்ந்து பழுதாகி வாகனங்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறியுள்ளது.

தென்காசி மாவட்டம் கே. கரிசல்குளம் கிராமத்திற்கு செல்லும் சாலையானது மிகவும் பாதிப்படைந்து பயணிக்க முடியாத நிலையில் இருக்கிறது. குறிப்பாக சாலையெங்கும் பள்ளம் பள்ளமாக இருப்பதால், அதில் பயணிப்போர் குலுங்கிய படியே செல்லும் நிலையும், வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பழுதாகி விபத்துக்குள்ளாகும் நிலையும் உள்ளது. 

இதனை சரிசெய்ய உள்ளூர் அதிகாரிகள் முதல் எம்.எல்.ஏ வரை பொதுமக்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனச்சொல்லப்படுகிறது. 

இந்நிலையில், கே. கரிசல்குளத்திற்கு சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்தின் டயர் கழன்று வாகனம் சாய்ந்தது. எனினும் வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சாமர்த்தியமாக வண்டியை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதோடு, வாகனத்தில் வந்த ஊழியர்களும் உயிர்தப்பினர்.

முன்னதாக, இதே வழியாக வந்த அரசு பேருந்து ஒன்றின் முன்புற டயர், இந்த படுக்குழி சாலைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் கழண்டு ஓடியது. இதில் ஏற்பட்ட விபத்தில் 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். 

இதனால், இந்த சாலையில் வாகனங்களை இயக்கவே அச்சப்படும் வாகனஓட்டிகளும் மக்களும், இனியும் உரிய நடவடிக்கை இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User