சவுக்கு சங்கருக்கு பெரும் சிக்கல்... குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்திய அறிவுரைக் கழகம்!

'சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல' என்று சென்னை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தது.

Jun 26, 2024 - 16:44
0 485
சவுக்கு சங்கருக்கு பெரும் சிக்கல்... குண்டர் சட்டத்தை உறுதிப்படுத்திய அறிவுரைக் கழகம்!
சவுக்கு சங்கர்

சென்னை: சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை சென்னை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. 

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதற்காக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அவர் மீது கஞ்சா வைத்திருந்தது உள்பட பல்வேறு வழக்குகள் பாய்ந்துள்ளன. இதனை தொடர்ந்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

தனது மகன் மீது போடப்பட்டுள்ள குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சவுக்கு சங்கரின் தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பாலாஜி சவுக்கு சங்கர் குண்டர் சட்டம் தொடர்பாக மாறுபட்ட தீர்ப்பு வழங்கினார்கள். அதாவது சவுக்கு சங்கரை மீதான குண்டர் ரத்து செய்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவில் போதைப்பொருள் வழக்கை குறிப்பிடவில்லை என அவர் தீர்ப்பில் கூறி இருந்தார். 

அதே வேளையில் மற்றொரு நீதிபதி பாலாஜி, சவுக்கு சங்கரின் தாய் மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு அனுமதியளித்த பின் ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார். 

இதனால் 3வது நீதிபதியான ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை காவல்துறை சார்பில் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்த காரணங்கள் விரிவாக விளக்கப்பட்டது. 

அதாவது ''சவுக்கு சங்கர் மீதான வழக்குகள், ஆதாரங்களை ஆய்வு செய்த பின், அவரால் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதால், அவரை குண்டர் சட்டத்தில் அடைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதற்கான அதிகாரம் அரசுக்கு உள்ளது. இது காவல் துறையின் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல'' என்று சென்னை காவல்துறை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தது. 

இதன்பிறகு சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்துக்கு தடை விதிக்காத நீதிபதி வழக்கின் விசாரணையை தள்ளி வைத்தார். இந்நிலையில், குண்டர் சட்டத்தின் கீழ் சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள அறிவுரைக் கழகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில், சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது சரியான நடவடிக்கை என்று சென்னை அறிவுரைக் கழகம் உறுதிப்படுத்தி உள்ளது. இது சவுக்கு சங்கருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User