விமானங்கள் மீது பாயும் ஒளி.. விஷமிகள் மீது கடும் நடவடிக்கை.. இந்திய விமான நிலைய ஆணையம் வார்னிங்

சென்னை விமான நிலையத்தில் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தரையிறங்க வரும் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவம் தண்டனைக்குரியது என்று இந்திய விமான நிலைய ஆணையம் எச்சரித்துள்ளது. 

May 03, 2024 - 13:48
0 346
விமானங்கள் மீது பாயும் ஒளி.. விஷமிகள் மீது கடும் நடவடிக்கை.. இந்திய விமான நிலைய ஆணையம் வார்னிங்

சென்னை  விமான நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து தரையிறங்க கூடிய விமானங்கள் ஓடுபாதையில் தரை இறங்குவதற்காக, தாழ்வாக பறக்கும் போது விமானத்தை நோக்கி சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள் என்று மாறுபட்ட கலர்களில், அவ்வப்போது லேசர் லைட் ஒளி அடிக்கப்படுகிறது. இது விமான போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தானது.

 

இந்த லேசர் லைட் ஒளி விமானத்தின் மீது பாய்ச்சும் போது, அது விமானியின் கண்களை நோக்கி பாய்வதால் விமானி ஒரு சில வினாடிகள் விமானத்தை இயக்குவதில் திணறும் நிலைக்கு ஆளாகின்றனர். ஆனாலும் விமானிகள் சமாளித்துக் கொண்டு விமானத்தை தரையிறக்குகின்றனர். சில விமானிகள் விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் உடனடியாக வானில் பறக்கச் செய்து விட்டு, அதன்பின்பு விமானத்தை தரையிறக்குகின்றனர். இந்த  சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன. 

துபாய், சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா உள்ளிட்ட நாடுகளில்  இருந்து வரும் சர்வதேச விமானங்கள், டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து வரும் உள்நாட்டு விமானங்கள் இந்த பாதிப்புக்கு உள்ளாகின்றன. குறிப்பாக நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன. 

இதைப்போன்ற லேசர் லைட் ஒளி பரங்கிமலை, நந்தம்பாக்கம், நங்கநல்லூர், பம்மல், பொழிச்சலூர், பழவந்தாங்கல், கிண்டி, சின்னமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்தும் அடிக்கடி வருவதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வந்த லேசர் லைட் ஒளி சென்னை சேப்பாக்கம் பகுதியில் இருந்து வந்ததாக தெரியவந்தது.

இந்த நிலையில் இதைப் போன்ற சம்பவங்கள் நடந்தால், உடனடியாக குறிப்பிட்ட விமானத்தின் விமானி அல்லது சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர். 

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்திய போலீசார் அவ்வப்போது பெரிய அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும் ஊழியர்கள் உட்பட சிலரை பிடித்து வந்து விசாரணை மேற்கொள்கின்றனர். ஆனால் அவர்கள் தான் லேசர் லைட் ஒளி அடித்தனர் என்பதற்கு முழுமையான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால் கடுமையாக எச்சரித்து அனுப்புகின்றனர்.

ஆனாலும் இந்த லேசர் லைட் ஒளி தற்போதும் அவ்வப்போது விமானங்களை நோக்கி அடிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாட்டு விமான நிறுவனங்களின் விமானங்கள், சென்னை விமான நிலையத்திற்கு விமானங்களை இயக்குவதற்கு தயங்குவதாகவும் கூறப்படுகிறது. இது இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதை அடுத்து லேசர் லைட் ஒளி அடிப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மிகவும் சீரியசான ஒரு பிரச்னையாக எடுத்துக்கொண்டு, இதுபோன்ற விஷமதனங்களை செய்யும் நபர்களை இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க இந்திய விமான நிலைய ஆணையம் முடிவெடுத்துள்ளது. 

சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், சமுதாய பொது நலன் கருதி, இதைப்போல் விமானங்களின் மீது லேசர் லைட் ஒளி அடிப்பவர்கள்  பற்றிய தகவல்கள் தெரிந்தால் உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கோ அல்லது காவல் துறைக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. 

இதைப் போன்ற விஷம செயல்களை செய்பவர்கள் மீது காவல்துறை மூலம், மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று இந்திய விமான நிலைய ஆணையரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User