Sivakarthikeyan: இயக்குநர் ஆசையில் சிவகார்த்திகேயன்... முதல் ஹீரோ யாருன்னு தெரியுமா..?
கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், விரைவில் இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்து வந்த அமரன் படத்தின் ஷூட்டிங் கடந்த வாரத்தில் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அமரன் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து அசத்தினார் சிவகார்த்திகேயன். அமரனை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் எஸ்கே 23 படத்தில் நடித்து வருகிறார். அமரன், எஸ்கே 23 என பிஸியாக இருக்கும் சிவகார்த்திகேயன், இன்னொரு பக்கம் பட தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சொந்தமாக படங்கள் தயாரித்ததால் சிவகார்த்திகேயன் கடனில் சிக்கிக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் அதைப்பற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் சூரி ஹீரோவாக நடித்துள்ள கொட்டுக்காளி படத்தை தயாரித்துள்ளார். இன்னும் பல மினிமம் பட்ஜெட் படங்களை தயாரிக்க பிளான் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். நடிகர், தயாரிப்பாளர் என இந்த இரண்டு மட்டும் தான் சிவாவின் ஆசை என ரசிகர்கள் நினைத்திருந்தனர். ஆனால், அவரோ அடுத்து இயக்குநர் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. பவர் பாண்டி படம் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். அதன் தொடர்ச்சியாக தனது 50வது படமான ராயனையும் தனுஷே இயக்கியுள்ளார்.
தனுஷின் நடிப்பை போலவே அவரது டைரக்ஷன் குறித்தும் இண்டஸ்ட்ரியில் மிகப் பெரிய டாக் இருக்கிறது. இதனால் நாமும் டைரக்ஷனில் இறங்கிவிடலாம் என சிவகார்த்திகேயன் முடிவு செய்துவிட்டார் போல தெரிகிறது. சிவகார்த்திகேயனின் இயக்குநர் ஆசை குறித்து நடிகர் சூரி ஓபனாக பேசியுள்ளார். இந்த வாரம் ரிலீஸாகும் கருடன் படத்தில் சசிகுமாருடன் சூரியும் லீடிங் ரோலில் நடித்துள்ளார். வெற்றிமாறனின் விடுதலைக்குப் பின்னர் சூரி லீட் ரோலில் நடித்துள்ள படம் கருடன் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூரி, சிவகார்த்திகேயனின் இயக்குநர் கனவு குறித்தும் பேசினார்.
அதாவது சில ஆண்டுகளுக்கு முன் தன்னிடம் ஒரு கதை இருப்பதாக சிவகார்த்திகேயன் கூறியதாகவும், அதை விரைவில் படமாக இயக்க வேண்டும் என்றும் தெரிவித்தாராம். மேலும், அந்தப் படத்தில் என்னை ஹீரோவாக நடிக்க வேண்டும் என சிவகார்த்திகேயன் கேட்டுக் கொண்டதாகவும் சூரி கூறியுள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் இயக்கும் முதல் படத்தில், சூரி ஹீரோவாக நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இப்போதைக்கு சிவகார்த்திகேயன் படம் இயக்க வாய்ப்பில்லை என்றும், அதற்கான நேரம் சீக்கிரமே அமையும் எனவும் சூரி தெரிவித்துள்ளார். சூரி கொடுத்துள்ள அப்டேட், சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Wow
0
Sad
0
Angry
0




Comments (0)