ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் கருணைத் தொகை : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

Feb 24, 2026 - 07:19
0 402
ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் கருணைத் தொகை : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு 
ஒவ்வொரு குடும்பத்திற்கு ரூ 10 ஆயிரம் கருணைத் தொகை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளையொட்டி சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அங்கு  மறைந்த தலைவர்களான எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

 இதையடுத்து அ.தி.மு.க. கொடியையும் ஏற்றி வைத்தார்.இதன் பின்னர் சமூக நீதியை காத்த காவலர் எடப்பாடியார் என்ற பெயரிலான அ.தி.மு.க. ஆண்டு மலரை வெளியிட்டார். ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் என்பதால் 78 கிலோ கேக் வெட்டப்பட்டது. இதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய எடப்பாடி பழனிசாமி , 3 ஆம் கட்டமாக தேர்தல் அறிவிப்புகளை வெளியிட்டார்."மு.க. ஸ்டாலின் தலைமையிலான நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசில் அத்தியாவசியப் பொருள்களின் விலை விஷம்போல ஏறியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் ஆகியவை இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் குடும்பச் சுமை பன்மடங்கு அதிகரித்துவிட்டது.மக்களின் சுமையைக் குறைக்கும்பொருட்டு வரும் தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைந்தபிறகு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ. 10,000 வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கப்படும். 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ. 1,000 வழங்கப்படும்.மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு தற்போது ரூ. 8,000 நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் இது அதிமுக ஆட்சி அமைத்த பிறகு ரூ.12,000 ஆக உயர்த்தப்படும்.

தைப்பொங்கலையொட்டி பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்.கைத்தறி நெசவாளர்களுக்கு விலையில்லா மின்சாரம் 300 யூனிட்டில் இருந்து 450 யூனிட்டாக உயர்த்தப்படும்.விசைத்தறி நெசவாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் விலையில்லா மின்சாரம் 1,000 யூனிட்டில் இருந்து 1,400 யூனிட்டாக உயர்த்தப்படும். நகரப் பகுதிகளில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்யப்படும்" என்று அறிவித்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User