நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார்

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில்,  தமிழகத்தில் 1.47 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பதற்றமான 6,300 இடங்களில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர்.

Apr 22, 2026 - 11:47
0 244
நாளை வாக்குப்பதிவு ஏற்பாடுகள் தீவிரம் : தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார்
தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீசார்

தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  தமிழகத்தில் 5.73 கோடி வாக்காளர்கள் உள்ளனர். மாநிலம் முழுவதும் 75 ஆயிரத்து 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினரும், தமிழ்நாடு சிறப்புக் காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் காவல்துறையினர், துணை ராணுவத்தினர், தீயணைப்புப் படையினர், வனத்துறையினர், சிறைத்துறையினர், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், போலீசார், ஊர்க்காவல் படையினர் என சுமார் 1.47 லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  பாதுகாப்பு பணிக்காக 295 கம்பெனிகளைச் சேர்ந்த சுமார் 23 ஆயிரம் துணை ராணுவப்படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

மேலும் இதில் 26,203 காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள், 94,598 தலைமைக் காவலர்கள், காவலர்கள் அடங்குவார்கள். அதேபோல சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த 12,150 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவத்தினர், போலீசார் தவிர்த்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற காவலர், ஓய்வு பெற்ற வன காவலர் ஆகியோர் சுமார் 20 ஆயிரம் பேர் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு வந்துள்ளனர். 

வாக்குப் பதிவு அன்று மாநிலம் முழுவதும் அதிரடிப்படை வீரர்கள் 514 வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள், ஏதாவது ஒரு பகுதியில் பிரச்னைகள் ஏற்பட்டால், அங்கு விரைந்து சென்று, சட்டம் மற்றும் ஒழுங்கு பாதிப்பு இல்லாத வகையில் பார்த்துக் கொள்வார்கள். இதேபோல காவல் துணை கண்காணிப்பாளர்கள், கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் கண்காணிப்பாளர்கள், டி.ஐ.ஜி., ஐ.ஜி.,காவல் ஆணையர்கள் ஆகியோருடன் 1,100 வாகனங்களில் அதிவிரைப்படையினர் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  

மாநிலத்தில் 6,300 பகுதிகள் பதற்றம் நிறைந்த இடங்களாக அறியப்படுவதால், அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிக பண புழக்கம் உள்ள கண்டறியப்பட்டுள்ள 118 தொகுதிகளிலும், அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இதே போல, சென்னை காவல்துறைக்குட்பட்ட 24 சட்டமன்ற தொகுதிகளில் 198 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு அங்கு துணை ராணுவத்தினரின் பாதுகாப்போடு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User