பிரதமருக்கு எதிரான முக்கிய வழக்கு ஒத்திவைப்பு...காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடைகோரிய வழக்கை, டெல்லி உயர்நீதிமன்றம் வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

Apr 26, 2024 - 13:06
0 319
பிரதமருக்கு எதிரான முக்கிய வழக்கு ஒத்திவைப்பு...காரணம் என்ன?

வழக்கறிஞரான ஜோன்டேல் என்பவர் இந்து - சீக்கிய தெய்வங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களின் பெயரால் பாஜக வாக்கு சேகரிப்பதாகக் கூறி பிரதமர் மோடியை 6 ஆண்டுகளுக்கு தகுதிநீக்கம் செய்யக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் கடவுள் - வழிபாட்டுத்தளங்கள் பெயரைக் கூறி பிரதமர் வாக்கு சேகரித்ததாக அவர் தனது மனுவில் சுட்டிக் காட்டியிருந்தார். அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியதாகவும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்து குரு பிரதிநிதிகளை அழைத்து வந்ததாகவும் பிரதமர் பேசியதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்திய அரசின் செலவில் விமானங்கள், ஹெலிகாப்டர்களில் பயணித்துச் சென்று வாக்காளர்களிடையே சாதி - மத அடிப்படையில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசுவதாகவும் மனுதாரர் குற்றம்சாட்டினார்.

இதனால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 153A பிரிவின் கீழ் பிரதமருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யவும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் அவரை தேர்தலில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யவும் இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அவர் புகாளித்தார். தொடர்ந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் ஜோன்டேல் தெரிவித்தார்.

தொடர்ந்து இவ்வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று(ஏப்ரல்-26) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இருப்பினும் இந்த வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதி சச்சின் தத்தா, சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட வழக்குகள் தொடர்பான அமர்வில் இருந்ததால் இவ்வழக்கை அவர் விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதைத்தொடர்ந்து வழக்கு ஏப்ரல் 29ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User