வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிகாலையில் பதற்றமான கோவில்பட்டி

கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்தலை தட்டிக்கேட்ட வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Apr 23, 2024 - 19:02
0 368
வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அதிகாலையில் பதற்றமான கோவில்பட்டி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ராஜூ நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மாரிசெல்வம். இவர் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.  இந்நிலையில், கோவில்பட்டி பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த பாம்பு கார்த்திக் என்பவர் சில தினங்களுக்கு முன்பு ராஜீவ் நகரை சேர்ந்த சிறுவன் ஒருவனை, வீடுகளில் இருந்து ரேஷன் அரிசி வாங்கித் தருவதற்கு கட்டாயப்படுத்தியதாக தெரிகிறது. இதற்கு சிறுவன் மறுக்கவே அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து தகவலறிந்த வழக்கறிஞர் மாரி செல்வம், பாம்பு கார்த்தியை தொடர்பு கொண்டு எதற்காக சிறுவனை தாக்கியது ஏன் என தட்டிக் கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே பாம்பு கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ரேஷன் அரிசி கடத்திச்சென்ற வாகனத்தை விருதுநகர் அருகே போலீசார் பிடித்ததாக தெரிகிறது.

 

வழக்கறிஞர் மாரிச்செல்வம் தான் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார் என எண்ணிய பாம்பு கார்த்திக் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து, நள்ளிரவு 2 மணியளவில், மாரி செல்வத்தை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளார். இதனையடுத்து, பாம்பு கார்த்திக்கும் அவரது ஆதரவாளர்களும், மாரிசெல்வத்தின் வீட்டுக்கு வந்து கதவை தட்டிய நிலையில், கதவை திறந்து வெளியே வந்த மாரி செல்வத்தின் மீது, பெட்ரோல் குண்டுகளை சரமாரியாக வீசிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

 

வீட்டுக்கு முன்பு இருந்த கிரில் கேட் திறக்கப்படாததால், வழக்கறிஞர் மாரிசெல்வம் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினார். ஆனால் அவரது வீட்டின் எதிரில் வைக்கப்பட்ட பொருட்கள், தீயில் கருகி சேதமடைந்தன. இதேபோல், ஊத்துப்பட்டி சாலையில் ஒரு தோட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மாரி செல்வத்தின் வாகனத்தின் மீதும் பெட்ரோல் குண்டுகளை வீசி தீக்கிரையாக்கியுள்ளனர்.

 

இதனால் ஆத்திரமடைந்த மாரிசெல்வத்தின் ஆதரவாளர்கள், பாம்பு கார்த்திக்கின் உறவினர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசி பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவங்களால், அப்பகுதி மக்களிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்த கோவில்பட்டி மேற்கு போலீசார், சம்பவ இடங்களில் இருந்து தடயங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User