மைக் துண்டிப்பு, தவறான தகவல்:வெளியேறியது ஏன் 13 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு ஆளுநர் விளக்கம்

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டசபைக்கு வருகைதந்த ஆளுநர் ஆர்.என். ரவி உரை நிகழ்த்தாமல் வெளியேறினார்.

Jan 20, 2026 - 05:30
0 331
மைக் துண்டிப்பு, தவறான தகவல்:வெளியேறியது ஏன் 13 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு ஆளுநர் விளக்கம்
13 குற்றச்சாட்டுகளை பட்டியலிட்டு ஆளுநர் விளக்கம்

தமிழக சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தாமல் ஆளுநர் ஆர்.என். ரவி புறக்கணித்தார். இது குறித்து விளக்கம் அளித்து மக்கள் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கமளித்து ஆளுநர் தரப்பில் அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

1) மைக் துண்டிப்பு: ஆளுநரின் மைக் பலமுறை அணைக்கப்பட்டது (Switch off), இதனால் அவர் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

2) தவறான தகவல்கள்: உரையில் ஆதாரமற்ற பல கோரிக்கைகளும், தவறான அறிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. மக்களை வாட்டும் பல முக்கியமான பிரச்சினைகள் இதில் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

3) முதலீடு குறித்த பொய்: 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடுகளை ஈர்த்துள்ளதாகக் கூறுவது உண்மைக்கு அப்பாற்பட்டது. பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித அளவிலேயே உள்ளன. 4 ஆண்டுகளுக்கு முன்பு அந்நிய நேரடி முதலீட்டில் 4-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது 6-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

4) பெண்கள் பாதுகாப்பு: போக்ஸோ (POCSO) பாலியல் வன்கொடுமைகள் 55 சதவீதமும், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் 33 சதவீதமும் அதிகரித்துள்ள நிலையில், பெண்கள் பாதுகாப்பு குறித்த விவகாரம் உரையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

5) போதைப்பொருள் புழக்கம்: பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அபாயகரமாக அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பழக்கத்தால் ஓராண்டில் சுமார் 2,000 இளைஞர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்தத் தீவிரமான சூழல் உரையில் சாதாரணமாகக் கடந்து செல்லப்பட்டுள்ளது.

6) தலித் மக்கள் மீதான வன்கொடுமை: பட்டியலின மக்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அது பற்றி உரையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

7) தற்கொலைகளின் தலைநகரம்: தமிழகத்தில் ஓராண்டில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர் (தினமும் சராசரியாக 65 தற்கொலைகள்). இந்தியாவின் 'தற்கொலைகளின் தலைநகரம்' என்று அழைக்கப்படும் அளவுக்குச் சூழல் மோசமாக இருந்தும், அரசு இதைக் கண்டுகொள்ளவில்லை.

8) கல்வித் தரம் குறைவு: கல்வி நிறுவனங்களில் நிலவும் நிர்வாகச் சீர்கேடுகள் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கின்றன. 50 சதவீதத்திற்கும் அதிகமான பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. கௌரவ விரிவுரையாளர்கள் போராட்ட நிலையில் உள்ளனர்.

9) முடங்கிய கிராம ஊராட்சிகள்: உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் ஆயிரக்கணக்கான கிராம ஊராட்சிகள் முடங்கியுள்ளன. இது அடிமட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகும். ஆனால் இது குறித்து உரையில் ஒரு வார்த்தை கூட இல்லை.

10) கோயில் நிர்வாகம்: ஆயிரக்கணக்கான கோயில்கள் அறங்காவலர் குழு இல்லாமல் அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ளன. பழமையான கோயில்களைப் பராமரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவுகள் 5 ஆண்டுகளாகச் செயல்படுத்தப்படவில்லை. இது பக்தர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறது.

11) சிறு, குறு தொழில்கள் (MSME): கூடுதல் செலவுகள் காரணமாகச் சிறு தொழில்கள் நலிவடைந்து வருகின்றன. நாட்டில் உள்ள 5.5 கோடி MSME-களில் தமிழ்நாட்டில் வெறும் 40 லட்சம் மட்டுமே உள்ளன. இதனால் தொழில்முனைவோர் அண்டை மாநிலங்களுக்குச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.

12) அரசு ஊழியர்கள் அதிருப்தி: கடைநிலை அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுகிறது. அவர்களின் நியாயமான கோரிக்கைகளைத் தீர்ப்பது குறித்து உரையில் எந்தக் குறிப்பும் இல்லை.

13) தேசிய கீதம் அவமதிப்பு: தேசிய கீதம் மீண்டும் ஒருமுறை அவமதிக்கப்பட்டுள்ளது. இது அடிப்படை அரசியலமைப்புச் சட்டக் கடமையைப் புறக்கணிப்பதாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User