Manjummal Boys: மஞ்ஞும்மல் பாய்ஸ்ஸை விமர்சித்த ஜெயமோகன்… பதிலடி கொடுத்த மல்லுவுட் திரை பிரபலம்!

மலையாளத்தில் ரிலீஸான மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படம் குறித்து எழுத்தாளர் ஜெயமோகன் கடுமையாக விமர்சித்தது பெரும் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் ஜெயமோகனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மலையாள எழுத்தாளர் உன்னி ஆர்.

Mar 12, 2024 - 10:58
0 259
Manjummal Boys: மஞ்ஞும்மல் பாய்ஸ்ஸை விமர்சித்த ஜெயமோகன்… பதிலடி கொடுத்த மல்லுவுட் திரை பிரபலம்!

மலையாளத்தில் வெளியான மஞ்ஞும்மல் பாய்ஸ் திரைப்படத்தை குடிப் பொறுக்கிகளின் கூத்தாட்டம் என விமர்சித்திருந்தார் எழுத்தாளர் ஜெயமோகன். உலகம் முழுவதும் 160 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ள மஞ்ஞும்மல் பாய்ஸ், தமிழக ரசிகர்களிடமும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. குணா படத்தின் கண்மணி அன்போடு பாடல் மஞ்ஞும்மல் பாய்ஸ்ஸில் இடம்பெற்றதை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். கடந்த மாதம் 22ம் தேதி வெளியான இந்தப் படம் இப்போதும் தமிழ்நாட்டில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.   

இந்த நிலையில் தான் மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை கடுமையாக விமர்சித்த ஜெயமோகன், மலையாளிகள் பற்றியும் தரக்குறைவாக பதிவிட்டிருந்தார். “மஞ்ஞும்மல் பாய்ஸ் எனக்கு எரிச்சலூட்டும் படமாக இருந்தது. ஏனென்றால் அது காட்டுவது புனைவு அல்ல. அதே மனநிலைதான் தென்னகம் முழுக்க சுற்றுலா இடங்களுக்கு வரும் கேரளத்துப் பொறுக்கிகளிடம் உள்ளது. சுற்றுலா மையங்கள் மட்டுமல்ல அடர் காடுகளுக்குள் கூட வந்துவிடுவார்கள். குடிகுடிகுடி அவ்வளவுதான். வாந்தி எடுப்பது, சலம்புவது, விழுந்து கிடப்பது, அத்துமீறுவது. வேறெதிலும் ஆர்வமில்லை. அடிப்படை அறிவு கிடையாது. எந்தப் பொது நாகரீகமும் கிடையாது. இந்த மலையாளப் பொறுக்கிகளுக்கு இன்னொரு மொழி தெரியாது. ஆனால் அவர்கள் மொழி பிறருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்ற தெனாவட்டு இருக்கும். இவர்கள் எடுக்கும் போதைவெறி சினிமாக்களை தமிழகத்தில் கொண்டாடுபவர்கள் அசடுகள் அல்லது அயோக்கியர்கள் என்றே வகைப்படுத்துவேன்” எனக் கூறியிருந்தார். 

இதனையடுத்து மஞ்ஞும்மல் பாய்ஸ் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். இவர்களுடன் தற்போது மலையாள எழுத்தாளரும் திரை பிரபலமுமான உன்னி ஆர்-ம் ஜெயமோகனுக்கு தக் லைஃப் கொடுத்துள்ளார். அதாவது, “மஞ்ஞும்மல் பாய்ஸ் என்பவர்கள் அடிமட்டத்தில் வசிக்கும் நண்பர்கள் குழு. மேட்டுக் குடித்தனத்துடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த எழுத்தாளருக்கு அவர்கள் அனைவரும் குடிகாரர்கள், பொறுக்கிகள் என உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், ஆபாத்து நேரத்தில் தன் நண்பனை காப்பாற்றும் மனிதாபிமானத்தை அவர் கண்டுகொள்ளவில்லை. இப்படிப்பட்டவர்கள் இறப்பது நல்லது என நினைக்கிறார்.”  

“இயற்கையின் நீதியாகப் பாருங்கள்! இயற்கையின் நீதி வெள்ளம் போல் அழிந்த போது மலையாளிகளும் தமிழர்களும் ஒருவரையொருவர் கைநீட்டினர், அதில் குடிகாரர்களும் விபச்சாரிகளும் இருந்தனர். கேரளாவுக்கு படம் எழுத வந்த பிறகு உங்களுக்குத் திரைக்கதை எழுதத் தெரியாது என்று தெரிந்து உங்களை ஒதுக்கிவிட்டார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதற்கான பழிவாங்கல் தானா இது..?” என கேள்வி எழுப்பியுள்ளார். உன்னி ஆரின் இந்த பதிலடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை எழுத்தாளரும் நடிகருமான கவிதா பாரதி தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல எழுத்தாளரான உன்னி ஆர், மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த கேரள கஃபே, பேச்சுலர் பார்ட்டி, சார்லி, பிலால் உள்ளிட்ட படங்களிலும் ஸ்க்ரிப்ட் ரைட்டிங்கில் பணியாற்றியுள்ளார்.    

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User