சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்..! பரப்புரையை தொடங்கிய இ.பி.எஸ்

Mar 24, 2024 - 12:22
0 200
சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல் களம்..! பரப்புரையை தொடங்கிய இ.பி.எஸ்

சேலத்தில் சாமி தரிசனம் மேற்கொண்டு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் வேட்பாளர்கள் அனைவரும் அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரசாரத்தை தொடங்கியிருக்கிறார்.

சேலம் மாவட்டம் பெரிய சோரகையில் உள்ள சென்றாய பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதைத் தொடர்ந்து சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அங்கு கூடியிருந்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரமும் வழங்கி அவர் ஆதரவு திரட்டினார்.

அடுத்தடுத்து வரும் நாட்களில் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட இருக்கிறார். பிரசாரம் தொடங்குவதற்கு முன்னதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி, நடைமுறைக்கு சாத்தியமான உண்மையான தேர்தல் அறிக்கையை அளித்த பெருமிதத்துடன் மக்களை சந்திக்க வருவதாக தெரிவித்துள்ளார்.

அண்மையில், திருச்சியில் இருந்து பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிய நிலையில், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பிரசாரத்தை தொடங்கியிருப்பதால் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User