அங்கெல்லாம் வேண்டாம்.. பாஜவுக்கு தாவும் விஜயதரணி? சமாதானம் பேசிய செல்வப்பெருந்தகை.. திடீர் ட்விஸ்ட்!

விஜயதாரணி நாளை சட்டப்பேரவையில் பட்ஜட் மீதான விவாதத்தில் பங்கேற்பார் என தெரிகிறது

Feb 20, 2024 - 12:09
Updated: 2 years ago
0 227
அங்கெல்லாம் வேண்டாம்.. பாஜவுக்கு தாவும் விஜயதரணி? சமாதானம் பேசிய செல்வப்பெருந்தகை.. திடீர் ட்விஸ்ட்!

காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி பாஜகவில் சேர இருப்பதாக கடந்த சில நாட்களாகவே ஊடகங்களில் செய்தி பரவி வரும் நிலையில், அவரிடம் காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கும் செல்வபெருந்தகை சமாதானம் பேசியதாகக் கூறப்படுகிறது. 

3 முறை விளவங்கோடு தொகுதியில் எம்எல்ஏவாக தொடர் வெற்றிபெற்ற விஜயதரணி, சட்டப்பேரவை கட்சி கொறடாவாக உள்ளார்.இவர் மக்களவை தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும், குறைந்தபட்சம் சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் பதவியாவது வேண்டும் என்றும் தலைமையை வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. வசந்தகுமார் மறைந்தபோதே கன்னியாகுமரி இடைத்தேர்தலில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாக தெரிகிறது.

ஆனால், கன்னியாகுமரி தொகுதியை மீண்டும் விஜய் வசந்த்துக்கே வழங்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுறது. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள விஜயதரணி, பிரதமர் மோடி முன்னிலையில் பாஜகவில் இணையப் போவதாகவும், அவர் கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடப் போவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று வைரலாகி வருகிறது. 

இதனிடையே சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வரும் வேளையில், கூட்டத் தொடரில் பங்கேற்காமல் விஜயதாரணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்காது என்று உறுதியான நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியை மாற்றினால் தான் தமிழ்நாட்டில் தங்களால் அரசியல் செய்ய இயலும் என்றும் அவர் தலைமையிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப் பெருந்தகையை காங்கிரஸ் மேலிடம் நியமித்துள்ளது. இது விஜயதரணிக்கு சற்று மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிகிறது.இப்படி இருக்க சக சட்டமன்ற உறுப்பினர் என்ற நட்பில் செல்வப் பெருந்தகை, டெல்லியில் முகாமிட்டுள்ள விஜயதரணியை செல்போனில் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்தியுள்ளார்.இந்த முறை விஜய்வசந்த் குமரி தொகுதியில் போட்டியிடட்டும், அதன் பின்னர் தகுந்த பதவியை வாங்கித் தருவது தனது பொறுப்பு என்று உத்தரவாதம் அளித்துள்ளார்.

செல்வப் பெருந்தகை சமாதானப்படுத்தியதை அடுத்து, பாஜகவில் இணையும்  முடிவை கைவிட்டு இன்று சென்னை திரும்பும் விஜயதாரணி, நாளை சட்டப்பேரவையில் பட்ஜட் மீதான விவாதத்தில் பங்கேற்பார் என தெரிகிறது

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User