"கோவையை புறக்கணித்த ஆட்சியாளர்கள்..." தண்ணீர் பஞ்சத்துக்கு இதுதான் காரணம்... பிரசாரத்தில் போட்டுடைத்த அண்ணாமலை!

சுகாதாரத்திலும் கோவை பின்தங்கியதற்கு, மாநில அரசின் கவனக்குறைவே காரணம் - அண்ணாமலை

Apr 08, 2024 - 11:58
0 384
"கோவையை புறக்கணித்த ஆட்சியாளர்கள்..." தண்ணீர் பஞ்சத்துக்கு இதுதான் காரணம்... பிரசாரத்தில் போட்டுடைத்த அண்ணாமலை!

கோவையில் தேர்தல் பிராசரம் மேற்கொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அம்மாவட்ட வளர்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களோ, மாநில அரசோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில், கோவை தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதை முன்னிட்டு, விநாயகபுரம் பகுதியில் அண்ணாமலை பிரசாரம் செய்தார். அப்போது, மக்களிடையே பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளாக கோவை மாவட்டத்திற்கு மாநில அரசு எந்த நலத்திட்ட உதவியையும் செய்யவில்லை என்று குற்றம்சாட்டினார். கோவை மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, தொகுதிக்கு எந்த முன்னேற்றத்தையும் செய்யாமல், புழல் சிறையில் உள்ளார் என்றும், அவருடைய நோக்கம் கோவையிலிருந்து எப்படி வருமானத்தைப் பறிக்கலாம் என்பதாகவே இருப்பதாகச் சாடினார்.

கோவை மக்கள் திமுகவுக்கு எதிராக இருக்கிறார்கள் என்று முதலமைச்சருக்கே தெரிந்ததால்தான், கோவைக்கு கிரிக்கெட் மைதானம் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக கூறினார். மேலும், மைதானம் அமைப்பதற்கு முன்பு, தரமான சாலை போடுங்கள், பஸ் ஸ்டாண்டு அமைத்துக் கொடுங்கள், குப்பைகளை முறையாக அகற்றுங்கள் முதலமைச்சரே என்று கிண்டலடித்தார்.

தொடர்ந்து, அஞ்சுகம் நகர் பகுதியில் பிரசாரம் செய்த அண்ணாமலை, கோவையின் முக்கிய நீராதாரமான சிறுவாணி நதி வறண்டு வருவதாகவும், 50 அடி நீர்மட்டம் உள்ள சிறுவாணி அணையை 16 அடிக்குக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள் என்றும் குற்றம்சாட்டினார். கோவையிலிருந்து நாடாளுமன்றத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள், மௌனவிரதம் மட்டுமே கடைபிடித்தார்கள் என்றும் அண்ணாமலை விமர்சித்தார். சுகாதாரத்திலும் கோவை பின்தங்கியதற்கு, மாநில அரசின் கவனக்குறைவே காரணம் என சாடினார். இதைத் தொடர்ந்து, கோவை நகர் முழுவதும் அண்ணாமலை பிரசாரம் மேற்கொண்டார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Wow Wow 0
Sad Sad 0
Angry Angry 0

Comments (0)

User